கரும்பு நினைவினில் இருக்கையில் சிரித்தோம்.
வேலிக் காத்தான் கழிகளை யொடித்து
கேலியும் கூத்தும் பாடியும் ஆடியும்
ஏவலைச் செய்த கூலி்யைக் கொண்டு
நேச நண்பர்கள் கூடி மகிழ்ந்தோம்!
செட்டிக் கடையினில் பொட்டுக் கடலையும்
வெட்டித் தந்திட்ட வெல்லக் கட்டியும்
ஒட்டி ஒட்டியே சேர்த்தும் மென்றும்
கெட்ட வார்த்தைகள் சொல்லித் திரிவோம்!!
மழைக்காலங்களில் குட்டை குளங்களில்
தழைகளும் இலைகளும் தேங்கிக் கிடப்பினும்
கொழகொழ மண்ணில் காலினை ஊன்றி
வழுக்கி விழுந்து விழச்செய்து சிரிப்போம்!!!
எருக்கம் பூக்களை எட்டிப் பறித்து
பருக்கள் மீதினில் வைத்து அழுத்தியும்
நெற்றி மேட்டினில் டப்பென வெடித்தும்
புற்றினில் கைவிட்டு புயகம் எழுப்புவோம்!!!!
உன்னிப் புதரில் வண்ணப் பூங்கொத்து
மின்னிடக் கண்டு மொத்தமாய் பிய்த்து
வாயினில் காம்பை வைத்து உறிஞ்சிட
நாயினைப் போலவே நாக்கினை நீட்டுவோம்.!!!!!
குன்றிமணிக் கொத்து மரத்தில் தொங்கிட
வென்றிடும் கவண்கல் துணையுடன் வீழ்த்தி
கருங்கல் எடுத்து உருட்டியும் இடித்தும்
பருப்பினை உண்டு பரவசம் எய்துவோம்!!!!!!
கோடை காலத்தில் காணாங் கோழிகள்
ஓடிடக் கண்டு விடாமற் துரத்தி
போசனம் செய்திட போட்டிகள் போட்டு
போது அறியாமல் பொழிலினில் ஓடுவோம்.!!!!!!!.
ஊரது ஒதுக்கிய புழக்கத்தில் இல்லாத
யாரும் அணுகாத பாழுங் கிணற்றில்
ஊறிடும் தென்னை மட்டையைப் பிடித்து
ஊர்தியாய் உறவியில் உலாவது வருவோம்!!!!!!!!
பிணக்கோ பிரிதலோ இல்லாத வாழ்வில்
உத்தம நண்பராய் ஊருக்குள் இருந்தோம்
குடும்பினி குடும்பம் என ஆனபின்னாலே
குப்புறப் படுத்தே கனவு காண்கிறோம்.!!!!!!!!!
சின்னஞ் சிறிய பூஞ்சிறகுகள் கொண்டு
துன்னநர் சித்திரக் காட்டில் பறந்தோம்
இரும்புச் சிறகுகள் முளைத்த பின்னரோ
கரும்பு நினைவினில் இருக்கையில்சிரித்தோம்.!!!!!