வறுமையின் வலி

நிலவு போன்ற



ஒளி பொருந்திய முகம் என்றனர்.

அவள் வீட்டிலோ,இரவில் வெளிச்சம் தருவதே

நிலவு மட்டும் தான்..



கண்களைப் பார்த்து,

மலர்விழி என்றனர்.

அதுதான்,




அவள் இதுவரை சூடிய ஒரே மலர்.




செவ்விதழோ பவிழம் என்றனர்.

இப்படி எவரேனும் கூறினால்தான்

அப்படி ஒரு ரத்தினம் இருப்பதே தெரியும் அவளுக்கு.



இடையோ இளங்கொடி என்றனர்.

அது கொடியிடை அல்ல;

பசியால் பாவப்பட்டு,

சூழ்நிலையால் சுருக்கப்பட்ட இடை.



இத்தனையும் கூறியவர்கள்,

வரதட்சணையாகக் கேட்டனர்

மலையளவு செல்வத்தை.



பொன்னை வைக்குமிடத்தில்

பூவையாவது வைக்க நினைத்தாலும்,

பூ வாங்கவும் பணமில்லாத

பாவி அவள் என் செய்வாள்?



வெறுத்துப் போன பிள்ளைவீட்டார்,



திரும்பிப் பார்க்காமல் சென்றனர் வீட்டை விட்டு..



வறுமையின் உச்சப் பிடியில்


சிக்கித் தவித்த நிலையில் அவள்..



வயதோ ஆனது முப்பத்தி இரண்டு-அது

அவளை பெண் பார்த்து,

ஏழை என்றதும் திரும்பிச் சென்ற

பிள்ளை வீட்டாரின் எண்ணிக்கையும் கூட!



வயதோ அதிகரித்தது;திருமண நம்பிக்கையோ

இரு மடங்கு வேகத்தில் குறைந்தது..



அழுதுப் புலம்பத் தோன்றினாலும்

கண்ணீர் வடிக்கவும் சக்தி இல்லாது போனாள்..



பழகிப் போன காட்சியாக மாறிய

நிகழ்வை மனதினுள் புதைத்தாள்

வாசலை வெறித்தபடி!

எழுதியவர் : indra (7-Jan-11, 11:17 pm)
பார்வை : 596

மேலே