உன்னை நினைக்காத நாளில்லை

உன்னை நினைக்காத நாளில்லை .............

உன் கைவிரல் தீட்டிய ஓவியமும்
உன் கைகள் பிடித்த தூரிகையும்
உன்னச் சுற்றி நகர்ந்த நாட்களும்
உன்னைத் தேடி நடந்த பொழுதுகளும்

நிழல் போல நானும் வலை போட நீயும்
நினைத்துப் பார்த்தபின் தெரிந்தது
நினைவலைகள் நெஞ்சில் நீந்துவது
நினைத்துப் பார்த்தால் வலிகளும்

ஒரு நாள் உனைக் காணாதா கண்கள்
ஒரு வார்த்தைக் கேட்காதா காதுகள்
ஓரிரு வருடம் நெருங்கியிருந்தும்
ஓரிரு வார்த்தைகள் இன்னும் மௌனமாய்

மறந்துப் போன சில வார்த்தைகளுக்கு
மறந்தும் சொல்ல முடியாத சில பதில்கள்
மறந்தும் கேட்க முடியாத சில கேள்விகள்
மறந்தும் கூட மறக்க மாட்டேன்

சில நினைவுகள் இன்னும் ஏக்கமாய்
சில மொழிகளில் பலதும் தேக்கமாய்
சில தனிமைகள் இன்னும் மௌனமாய்
சில பொழுதுகள் நினைக்கும் முழுதுமாய்

முதல் காதல் கடிதம் பகிர்ந்தது உன்னிடம்
முதல் ஸ்பரிசத்தை தெரிந்ததும் உன்னிடம்
முதல் என்று தெரிந்தும் ஏன் முடிவானாய்
முழுவதும் தெரிந்தும் ஏன் முகம் மறைத்தாய்

இன்னும் மறக்க வில்லை மௌனங்களை
இன்னும் பொழுதுகளும் எனக்கில்லை
இனியொரு பிறப்பெடுக்க வழியில்லை
இனி பிறந்தாலும் சேர வாய்ப்பில்லை

புரியாத நாளில் புரியத் தெரியவில்லை
புரிந்த பின்பு கைகளில் ஒன்றுமில்லை
புரிந்த உனக்கு புரிய வைக்க முடிய வில்லை
புரியாத எனக்கு மறக்க மனமில்லை

எண்ணங்கள் உன் மனதில் பொய்யில்லை
என்னை ஓவியமாக்கிட முடியவில்லை
என்னால் பொய் சொல்ல முடியவில்லை
என்னால் உன்னை மறக்க முடியவில்லை

உன்னை நினைக்காத நாளில்லை
உன்னை மறக்க விருப்பமில்லை
உன்னை நினைக்கும் போது ஓவியமாகிறாய்
உனை எழுத நினைத்தால் காவியமாகிறாய்


......................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (10-Dec-13, 10:08 am)
பார்வை : 942

மேலே