காதலனின் பிரிவாற்றாமை நாட்டுப்புற பாடல் வடிவில்

தலைவனே
காதலின் காதலனே - இந்த
கோதையின் கோவலனே
அழகு கோமகனே

என் நெஞ்சு காஞ்சு கிடக்கு
மஞ்ச காட்டு நினைப்பு
மத்தியான வெயிலிலும்
ஈரச் சாரல் தெளிக்குது

கோரப் புல்லு எல்லாம்
நம்ம சொல்லு தாங்கி கிடக்குது
நம்ம காதல் கதை இப்போ
புல்லு பாட்டா கேக்குது
நீங்க இங்க இல்லாட்டா - அவைகளுக்குள்
இல்லையாம் கலாட்டா

ஆத்து தண்ணீ எல்லாம்
நம்மை பாத்து பாத்து நிக்குது
சேத்துக்குள்ள நாம
கால வெச்ச காவியத்த
தேடித் தேடித் திரியுது

கரும்பு தோட்டம் எல்லாம்
உம்ம
குறும்பு சொல்லி சிரிக்குது
அரும்புமா மீண்டும் அந்த நாட்கள்
விரும்பி விம்மி கிடக்குது

சோளக் காட்டுக்குள்ள
சோடியாத் தான் திரிஞ்சோம்
சோதனையின் காலம்
சோகக் காடு போல
சோளக் காடு கிடக்குதே
சேர்ந்து நம்மள பாத்துட்டா
சோளக் காடு
சோடிக் காடு ஆயிடுமாம்
வேகமா வா மாமா - அவை
பாவமாம்

பட்டணம் புறப்பட்டு போன
என் பட்டி காட்டு ராசா
பத்து நாள் ஆச்சு
உம்ம முத்தக் காத்து
இன்னும் வந்து சேரலையே
தந்த தடயம் உங்க கிட்ட
வந்த தடயம் எனக்கு
எப்போ கிட்ட?

சோறு திங்க முடியலையே
பேறு காலம் போல கிடக்கேனே
உம்ம நினைப்பு
உள்ள கிடந்து
முட்டி நிக்குது
வெட்டி வெளிய எடுக்க தவிக்குது

கடிதாசி வருமுன்னு
கைராசி பாத்து சொன்னான் - என்
காதல் ராசி தெரியாதவன் - என்
மவராசன் கண்ணுக்குள்ளேயே கிடக்கீரே
கண்ணு கரை கடக்க மாட்டீரே
ஊர் கரை ஏனையா கடந்தீரு?
ஊர்க் குயிலு கேக்குது
எங்க புள்ள உன் சோடின்னு?

அப்பனும் ஆத்தாலும்
அய்த்தையும் மாமனும்
பைத்தியமா பாக்காக
வைத்தியரும் வந்தாரு - இதுக்கு
வைத்தியமே இல்லன்னாரு - ஐயா
வைத்தியரே சீக்கிரமா வாரும்
உம்ம வைத்தியத்த தாரும் - உம்ம
கையால தொடும் போதும்
சிறுக்கி மவ
சிட்டாப் பறப்பேனே
பட்டுப் போனவ
பட்டாப் பூத்து நிப்பேனே

நிலவு சாட்சியாத்தான்
களவு செய்து கிடந்தோம் - அந்த
நிலவ கேட்டுப் பாரும் - என்
நிலமைய சத்தம் போட்டு சொல்லும்
சத்தியமா உம்ம நினைப்பு
நித்தமும் என்னை
கொஞ்சம் கொஞ்சமா கொல்லும்
சீக்கிரமா வாரும்

எழுதியவர் : Raymond (28-Dec-13, 6:50 am)
பார்வை : 120

மேலே