கல்லணைக்கோர் பயணம்13
கல்லணைக்கோர் பயணம்..13
(இடையாற்றுமங்கலதிலிருந்து )
கொள்ளிடம் நீண்டது
நடக்க நடக்க..
ஆடுகளும் மாடுகளும்
அங்கங்கு மேய்ந்தன
கூட்டம் கூட்டமாய்
மனித நடமாட்டமும்
தென்பட்டது கண்ணில்..
மக்களையும் மாக்களையும்
கண்டதும் மகிழ்ச்சி
வெள்ளம் மனதிற்குள்
பாலையையும் சோலையையும்
தன்னகத்தே கொண்டாலும்
வருவோரை வரவேற்று
தெளிந்த நீரையும்
தூய காற்றையும்
அள்ளி வழங்கி
ஆயுளை கூட்டி
அமைதியாய் வாழ்ந்தது
கர்வமில்லா கொள்ளிடம்
மறுகரை முடிகையில்
கரையை தழுவியவாறு
சிற்றாறு ஓடியது
பயணித்து முடித்தவர்களும்
பயணத்தை தொடர்பவர்களும்
களைப்பாற குளித்தனர்.
மிதிவண்டிகளும் குளித்தன
மாடுகளும் குளித்தன
மனிதர்களின் தயவால்..
நாயும் நீந்தியது
நடந்திடும் முதலாளிக்கு
வழித்துணையாய் செல்ல..
மகளிரின் கைகளில்
அடிவாங்கி அழுத
துணிகள் தூய்மையாகின
கொள்ளிடத்தில் குளித்து
மணலுக்கு போர்த்தப்பட்டது
ஈரத்துணிகள் பொன்னடையாய்
உலர்ந்து முடிக்கும்வரை..
கரையோர செடிகளும்
கொடிகளும் மரங்களும்
நிழலையும் கொடுத்து
சாமரமும் வீசின
சிற்றாறில் பயணிக்கும்
ஒன்றுபட்ட நீர்த்துளிகளுக்கு..
கரையை ஒட்டிய பசுமை
கண்ணைக் கவர்ந்தது
ஆம்..! எதிர்புறம் இருந்தது
செங்கரும்பு தோட்டம்..
(பயணிப்போம்..13)