மனிதக் கல்லறை

நான் இன்று சுகமாய்
நான் இன்று நிம்மதியாய்
நான் இன்று ஓய்வாய்
இருக்கிறேன்.
பிள்ளையின் பிடுங்கல்
இல்லை.
மனைவியின் குடைச்சல்
இல்லை.
மாண்டவனான எனக்கும்
மாலையிட்ட மாடமாளிகை
ஒன்றுள்ளது.
என் பக்கத்தில் ஒருவன்,
அங்க வஸ்திரத்தோடு மிடுக்காய்.
அவன் பக்கத்தில் ஒருவன்
அங்கமதில் ஆடையே இன்றி
அவன் அருகில் கட்சிக் கொடி
போர்த்தப்பட்ட நிலையில்
சாதி மதம் சரிசமமாகுவது
சமாதியில் தான் - என்பது
மனிதக் கல்லறை தத்துவம்.
என்பது வருடம் பார்த்துப் பார்த்து
வளர்த்த உடல் இன்று
யாரும் பார்க்காத இடத்தில்
மறைவாய்.
மண்ணில் இரக்காத நானும்
இன்று வள்ளல்.
எப்படி?
தானமாக என் உடலையே
புழுக்களுக்கு வழங்கித் தான்,
இது தான் மனிதக் கல்லறை
விதி.
இயற்கையில் இன்புற்ற நான் - இன்று
இறுக்கமும் புழுக்கமும்
நிறைந்த இடத்தில் - பரவாயில்லை
இங்கே புழுகும் மனிதத்தின்
ஆட்சி இல்லையே.
"ஐயையோ காணல்லையே
எங்கே எங்கே அது?" என்றது ஒன்று .
எது என்றேன்.
"என் நெற்றிக் காசு கண்டிகளா ?"
கண்டேன் என்றதும் எங்கே என்றது.
நானும் சொன்னேன்,
''இறுதிச் சடங்கில் உன் மகனின்
சட்டை பையில்''
இதுவே
மனிதக் கல்லறை
ரகசியம்.
காயத்திரி
ஸ்ரீலங்கா