சம்மதிப்பாயா அம்மா

மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !

இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !

தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !

களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !

சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !

சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?

தரையிலிட்ட மீன்போலே
தவிக்கின்றேன் துடிக்கின்றேன்
தாலிஎந்தன் கழுத்திலேற
தாயேநீ அருள்புரிவாய் !

என்காதல் ஏற்றுக்கொள்ள
எள்ளளவும் மனமிலையோ ?
கன்னியாய் நாள்கழிப்பேன்
கள்ளத்தனம் நான்செய்யேன் !

கடவுளெனக்கு நீயம்மா
காதலுனக்குப் பிறகம்மா
கனியுமென்ற நம்பிக்கையில்
காத்திருப்பேன் என்அம்மா ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Feb-14, 11:24 pm)
பார்வை : 405

மேலே