முதன் முதலாய் நான் - குமரி

கருவறை நான் கண்டதில்லை
கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு
காணாத முதல் ஆலயம் கருவறையே..!

பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை
பிதாவும் கரங்களில் ஏந்தினாராம்
பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..!

முறித்த வாழையிலை சுருட்டி
முன்வாயில் நான் உருட்டி
முழங்கினேன் என் முதல் வாத்தியம்..!

ஒருவரின் துணி பிடித்து
ஓடுகிறவன் கால் மிதித்து
ஓட்டினேன் என் முதல் வாகனம்..!

புத்தகத்தின் நடு பக்கத்தில்
புது குட்டி போடுமென்று
புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..!

மதிப்பெண் அட்டை கேட்டபோது
மறைத்து வைத்த பைநோக்கி
இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..!

பப்பாளியிலை குழல் ஒடித்து
பக்கத்து வீட்டு பையனுடன்
இருமுனையில் பேசியது முதல் அலைபேசி..!

திருவிழா ராட்டிணத்தில் ஏறி
திருதிருன்னு சுற்றி சுற்றி
இறங்கியது முதல் விமான பயணம்..!

கடற்கரையில் கடல் ஒழிக
கைகொண்டு எழுதி காத்துநின்றேன்
கடல் அழித்தது முதல் கையெழுத்து..!

எழுதியவர் : (12-Mar-14, 1:24 am)
பார்வை : 449

மேலே