தீபாவளிக்கு மறுநாள்

தீபாவளிக்கு மறுநாள்
ஒளிக்குடையாய்
இரவை நனைத்த கம்பி மத்தாப்பு
தீபாவளி தின்று போட்ட
ஐஸ் குச்சியாய்

புதைத்து வைத்த
புன்னகையை
பொங்கிக் கொட்டிய
பூந்தொட்டிகள்



வானத்தில் காறி உமிழ்ந்த
வண்ணப் பட்டாசுகள்
வீழ்ந்து கிடந்தன
காகிதத்தின் சளியும் எச்சிலுமாய்

மால்குடி மிட்டாயின் சட்டையும்
லாலா கடை அல்வாவின் கோவனமும்

அனுஷ்கா சிரிக்கும்
அட்டைப் பெட்டிகளும்

நல்லி எலும்புகளும்
பல்லை வென்ற பிற எலும்புகளும்

காலையில் காலமான அப்பாவும்

ஆம்
அவசியப்படவில்லையென்றால்
அப்பாவும் குப்பை தானோ
அள்ளிச் சென்று கொட்ட.

எழுதியவர் : ராசைக்கவிபாலா (19-Mar-14, 9:51 am)
சேர்த்தது : ராசைக் கவி பாலா
பார்வை : 69

மேலே