நேசத்துடன் ஒர் நெஞ்சம்

என் இனிய தோழியே!
நன்றிகள் பலவாகி
நானுரைக்கும் ஒர் மடல்!

ஏதோ சொல்லத்துடிக்கிறேன்
எழுத்துக்கோர்வைகள்
எனை ஏளனம் செய்தபடி……
கட்டுக்குள் அடக்கமுடியுமா
அவளின் கரிசனத்தை என………

முயற்சிக்கிறேன்….
முழுதாய் முடியாவிட்டாலும்…..

இப்பொழுதெல்லாம்
சிறகு முளைத்திட்டு
சிரித்தபடி பறந்திட்டு
சீராய் சுவாசிக்கிறது
என் இதயம்!

தூரம் தொலைதூரம்
தொலைபேசி இதழோரம்
இருந்தாலும் நீ என்னருகில்!
புல்வெளிப்பூக்களில்
காண்கிறேன் உன் சிரிப்பை….

உள்ளத்தில் தோன்றியதை
உள்ளபடி உரைத்திட்டால்
உண்மையான ஆறுதலாய்
உயர்வை மட்டுமே
உன்னதமாய் எடுத்துரைக்கும்
உபயக்காரி!

ஆயிரம் சுமைகளை
அகத்தே சுமந்தாலும்
அழகாய் பேசி
ஆனந்தமாய் சிரிக்கவைக்கும்
சிங்காரி!

அடுப்படியில் இருந்தாலும்
அன்றைய நாள் வரை
அறிவியல் அரசியலை
அழகாய் கோடிடும்
ஆக்கபூர்வ சிந்தனைக்காரி!

கல்லூரி நாட்களில்
கைகோர்த்து சிரித்திட்டு
கல்யாண வாழ்க்கையில்
கரைந்தே போனாலும்
காலத்தின் ஓட்டத்தில்
கண்டுபிடித்து கைசேர்த்த
கருணைக்காரி!

சீதனம் கொண்டவரின்
செல்வமகளாய் பிறந்தும்
இன்றுவரை இம்மியும்
திமிர்தனம் இல்லாத
இனியவளாய்……
எளியவளாய்……என் தோழி!

இவளின்
ஆத்மார்த்த அன்பிற்க்கு
அணையின்றி கடக்கும்
என் கண்ணீர்துளிகள் தவிர
வேறேன்ன சமர்பிக்க
நானறியேன் பராபரமே!

எழுதியவர் : விஜி (13-Apr-14, 10:34 pm)
பார்வை : 147

மேலே