நட்சத்திரமாய் நீ

-------- நட்சத்திரமாய் நீ ---------

அமாவாசைகள் தோற்ற ஓர்
அடர்ந்த ராப்பொழுதொத்த,
இருள் கூடிக்கூச்சலிடும்
இதயத்தின் ஆழ்குகைக்குள் - என்
எழுஜென்ம இன்பம் பிசைந்து
சாறெடுத்து, சாந்தாக்கி
எழுப்பிய நினைவுப்பேழையுள்,
அடைத்து வைக்கிறேன்,
உன் சிரிப்பின் பொழுதுகளை.

அதிர்ந்து சிரித்துவிடாதே!!..
உடைபேழை வழிவழியும்,
சிரிப்புச் சிதறல்களில் சிக்கிநான்
சிதைந்துவிடக்கூடும்.

கைவிரித்து, காற்றடைத்து,
விரலிடைப்புகும்
தென்றலைத் தீயாக்கி,
காதோரம் சூடேற்றும்
ஸ்பரிசங்களின் வழி,
யாருமறியா உன்னிதழ் கூறும்,
யாவருமறிந்த ரகசியங்கள்.

ஓவ்வொரு உதட்டசைவிலும்
மரித்து மரிக்கும் மரித்தல்களினூடே,
யுகங்கள் வாழ்ந்து கழிக்கிறேன் - ஒரு
வண்ணத்துப்பூச்சியின் கனவாக.

கோடிப் பறவைகள் - நிழல்
தேடிக்களைத்து பின்
வாடி வடித்த நீர்
வழியெங்கும் நிறைக்கும்,
வாட்டும் வெயில் பருவத்தில்,
வந்தெதிர் நிற்கிறாய்,
வானவில் சேலையுடுத்தி - உன்

இருவிழிக்குளிர் படும்,
இமைநிழல் பகுதியில்,
இடம் பிடிக்க கடும் போர்,
இடி, மின்னல், மழைகளிடையே.

உன்னுடல் தழுவி,நிலம் வீழும்,
அலைகேசம் கோர்த்து,
வேய்கிறேன் நம் கூரையை.
உலகக்காதலர் அனைவரின்,
சாபமூட்டை சுமந்து - நம்
கூரைக்குள் குடிவர
காத்திருக்கிறது நிலா.

என்னுயிர் குடிலின் இண்டுகளிலும்,
நிறைந்து, வியாபித்து, விரிந்து,
இறந்த இதயவிளக்குத் திரிதூண்டி,
காதலூற்றி, ஒளியேற்றும்,
நட்சத்திரமாய் நீ.

எழுதியவர் : ஈ.ரா. (13-Apr-14, 10:03 pm)
பார்வை : 262

மேலே