முந்தையோர் கண்ட முறை - ஆசாரக் கோவை 11

இன்னிசை வெண்பா

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே
முந்தையோர் கண்ட முறை. 11 ஆசாரக் கோவை

பொருளுரை:

சிறப்பான குணநலமுடையவர் ஓர் ஆடையையாவது இடையில் உடுத்தாமல் நீராடமாட்டார்.

இடையில் மட்டும் ஓராடையை உடுத்தி உண்ண மாட்டார்.

குளிக்கும் போது உடுத்திய உடையை நீரில் பிழிய மாட்டார்.

மேலாடையின்றி, இடுப்பில் உடுத்திய ஓராடையுடன் கற்றறிந்தோர் அவைக்குச் செல்லமாட்டார் என்பது நமக்கு முன் பிறந்த அறிவுடைய பெரியோர்கள் கண்ட நல்ல வழிமுறையாகும்.

மார்பை மறைக்கும் மேலாடையும் அணிந்து முறையாகச் செல்ல வேண்டும்.

கருத்துரை:

நீராடல், உண்ணல், அவை புகல் ஆகிய காலங்களில் உடையுடுத்த வேண்டிய முறையில் உடுத்துவது நற்பண்புகளாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-14, 8:50 am)
பார்வை : 203

மேலே