தமிழனென்று சொல்லவேண்டுமா

" தமிழனென்று சொல்லவேண்டுமா..?! "

தமிழகம் வந்தோரெல்லாம்
தமிழை தம்முயிராக்கி
தம்பேரை தமிழாக்கி - கல்லறையிலும்
தமிழெழுதிப் போக!

தமிழகத்தில் பிறந்தோம்!
தமிழ்த்தாய் மடியில் வளர்ந்தோம்!
தமிழென்றுகூட சொல்லத்தெரியவில்லை - நாம்
தமிழராக இருக்கின்றோம்?

நிலையும் நல்லதோ? - இந்த
நிகழ்வும் சரிதானோ?
நாம் வீழ்வது எதனால்? - இங்கு
நாம் வாழ்வது எதற்காக?

சிந்தித்திடு தமிழா!
செந்தமிழை மறந்து சிறப்பில்லை!
சீர்செய்ய இனியெவரும் பிறபாரில்லை!
செயல்பாடு நீ செயல்பாடு!

தமிழிலேயே பெயர் வைப்போம்
நம் பிள்ளைகளுக்கு
தமிழை இழக்காமல் கொடுப்போம்
நம் சந்ததியருக்கு!

மழலைக்கு முதலில்
தமிழமுது ஊட்டுவோம்!
மழலையின் முதலமுதம்
தமிழாக இருக்கட்டும்!

பாட்டி சொல்லும் கதைகள்
பைந்தமிழாக இருக்கட்டும்!
பேத்தி பாடும் பாடல்கள்
செந்தமிழாக தவழட்டும்!

பணம் சம்பாதிக்க
பத்துமொழியும் கற்கட்டும்!
குணம் சம்பாதிக்க
தாய்மொழியை அறிந்திடட்டும்!

சுயமாக சிந்தித்திட
சொந்தமொழி வேண்டுமடா!
தன்மானம் வளர
தாய்மொழி தேவையடா!

ஏட்டறிவு பட்டம்பெற
எழுத்தறிவு வேலைபெற!
கல்விகேள்வி பெற
செந்தமிழைத் திற!

தமிழை யாரும்
தாழ்த்திடவும் முடியாது!
தமிழை யாரும்
மறந்திடவும் முடியாது!

'டமில'ரென்று சொல்லிக்'கொல்லாதே'
"தமிழ்" உயிரைக் கொல்லாதே!
'டமில'னாக இருந்திடாதே! - இனியும் நீ!
'டமில'ரென்று சொல்லாதே!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (25-May-14, 8:48 am)
பார்வை : 223

மேலே