எங்கே போவேன்

எங்கே போவேன்?
இவ்வுல்லகை விட்டு...

மாமியார் கொடுமை
வரதட்சணைக் கொடுமை
விதியின் கொடுமை
இவைதவிர்த்து
இதுஎன்ன புதுக் கொடுமை...

அப்பான்னு நினைத்து
அன்பாகப் பழகினால்
அசிங்கமாய்த் தொடுகிறான்...

சகோதரன்னு நினைத்து
சரிசமமாய் பழகினால்
சங்கடப்படுத்துகிறான் ..

மாமான்னு நினைத்து
மரியாதையுடன் பேசினால்
மட்டமாய் நடக்கிறான்...

உறவுகள் அனைத்தும்
உரிமைக்கொண்டு
உறவாடவே அழைக்கின்றது..

பாதுகாப்பை நாடி
பகுத்தறிவு பெற
பள்ளிக்குச் சென்றால்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையுமென்கிறான்...

நட்புக் கரமொன்று
நண்பனாய்த் தலைகோதி
நிம்மதியாய் தூங்கினால்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுக்கிறான்...

இதனாலேயே
தனிமையில் வாழ
பசிக்கொடுமைக்கு
பணிக்குச் சென்றால்
பார்ப்பவரெல்லாம்
படுக்கைக்கு அழைக்கிறான்...

பயந்துபோய்
பாதுகாப்புக் கருதி
பணி அமர்தியவனிடம் கூறினால்
விலைதந்து
விலைமாதுவாக மாற்றுகிறான்...

கடமைபுரியும்
காவல் அதிகாரியிடம்
பதிவு செய்ய போனால்
கம்பிகளுக்கு இடையில்
கைபிடித்து இழுக்கிறான்...

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தால்
ஆறுதலாய்த் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்கிறான்
பூசாரி...
அவனும் ஆண்தானே!!!

அலறி அடித்து ஓடுகின்றேன்
எங்கேபோவேன்?

சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவும் சமுதாயம்
பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும்
திருநாள்
எந்நாளோ?

பாவிகளின் பாலியல்
வன்முறை எப்போது ஓயுமோ?

எழுதியவர் : பிரபாகரன் (17-Jun-14, 6:39 am)
Tanglish : engae poven
பார்வை : 116

மேலே