கூட்டல், கழித்தல், பெருக்கல் போட்டிக்கவிதை

கூட்டிக் கொள் கூட்டிக்கொள்...
பெற்றோரிடம் பாசம் நுகரும் நேரத்தினை!
வாசிப்புச்சுவாசிப்பின் அளவுகோலை!
மனிதம் கொழிக்கும் நல்மனதை!
மாண்புடன் நடக்கும் நன்மதிப்பை!
இயற்கையை காக்கும் விழிப்புணர்வை!
ஒளவை சொல்லிய நன்னெறியை!
ஐயன் சொல்லிய பாடங்களை!
இன்னும் இனியவை ஆயிரத்தை!

இனிக் கழிக்கின்ற பொருள் சொல்வேன்...
கனிவுடனே நீயும் கேள்!!
ஹார்மோன்கள் ஆட்டி வைக்கும்
இளவயது உடல்மாற்றம்!
விடம் போல குடியேறும்
மனதினிலே தடுமாற்றம்!
தடம் மாறும் எண்ணங்கள்
தடை தாண்ட இடம் தேடும்!
விடாது கருப்பு என
தொடத் துடித்து உனைத் துரத்தும்!
அடாத சகவாசம்
அடங்காமல் உனை அழிக்கும்!
விட்டுவிடாதே மொத்தமாய்
உனை உயிரோடு முழுங்கிவிட!
கழித்துவிடு கடைநிலை அசிங்கங்களை
இழிவுகள் என்றுமே உகந்தவை அல்ல!

சுற்றம் பந்த பாசங்களை
சற்றுத் தள்ளிப் பூட்டி வைத்து
மின்திரைகளுக்குள் கூட்டி வைத்திருக்கும்
பொன்னான நேரத்தையும் கொஞ்சம்
இங்கே கழித்து அங்கே கூட்டிக்கொள்!

பெருக்கிக் கொள் இன்னும் பெருக்கிக் கொள்!
பொங்கிப் பெருகும் பாசத்தினை!
மங்காமல் ஒளிரும் பேரறிவை!
இலட்சியம் நோக்கிய பெருங்கனவை!
ஈகம் செய்திடும் இறைமனதை!
நாவினால் சுடா வார்த்தைகளை!
தவறுகள் பொடியாக்கும் எண்ணத்தினை!
தாய்த்தமிழ் வளர்ச்சிக்கு உன்பங்கினை!
பறந்து செல்லும் தூரத்தினை!
பந்தயக் குதிரையின் வேகத்தினை!

வேறென்ன இன்னும் சொல்ல
வான் பறவை நீ பறந்து பறந்து செல்லு...
பொன்னொளி தோன்றும்
வண்ணத் திசை தனை நோக்கி...


கவிதை, நிழற்படம் : கீர்த்தனா (கீதா ரவி)

எழுதியவர் : ---கீர்த்தனா--- (கீதா ரவி) (29-Aug-14, 7:20 pm)
பார்வை : 76

மேலே