சரி

எங்கேயோ சிறகடித்து பறக்கிறது மனது.. இந்த பூமிக்கு மட்டும் நான் சொந்தகாரனில்லை என்று எப்போதும் உள்ளே ஒரு உணர்வு சொல்லிக் கொண்டே
இருக்கிறது.

சுற்றுப்புற சூழல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வரைமுறை கோட்டினை மனதளவில் கிழித்து மனிதனை மட்டுப்பட்ட ஒரு நிலையில் வைத்திருக்கிறது. சிறகடித்து பறக்கும் நேரங்களில் எல்லா எல்லைகளும் மறைய கட்டற்ற ஒரு வெளியில் நினைவுகளற்று இலக்குகளும் அற்று பறத்தலில் லயித்து நகரும் போது அந்த சுகம் அலாதியானதுதானே.....!

வெற்று வானத்தை ஓராயிரம் எண்ணங்களோடு பார்த்துவிட்டு நகர்ந்து போகாமல் ஒரு பறவையாக உங்களை உடனடியாக பாவியுங்கள்...! பாவித்த பின் சட சட வென்று சிறகடியுங்கள்.. உங்களின் சிறகடிப்பில் அறியாமைத்தூசுகளும், கட்டுப்பாட்டு அழுக்குகளும் பறந்தே போகட்டும்... எவ்விப் பிடியுங்கள் கட்டுக்களற்ற வெளியின் நுனியை..இதோ..மேலே..மேலே மேலே...மேலே...

காற்றின் திசை பற்றிய கணக்கு தெரிந்து விட்டதா.. ஹா ஹா..ஹா.. எங்கே செல்லவேண்டும் என்று ஏன் நாம் தீர்மானிக்க வேண்டும்.. காற்றின் நகர்வு தீர்மானிக்கட்டும். என்னது இடம் நோக்கிய நகர்வா....சரி....எது இடம்..ஓ. எனக்கு இடம் எது.... நிஜத்தில் வெட்டவெளியில் இடம் வலம் என்று ஒன்று இல்லைதானே....? காலம் காலமாய் பாவித்து வந்த பொய் ஒன்று ஒடிந்து விழுந்தது

....காற்றின் திசை நோக்கிய நகர்வு உண்டானது.......

இறகுகளுக்குள் காதலோடு காற்று...பறவையாய் மாறிய நம்மை காதலோடு கூட்டிச் செல்கிறது கண்டீரா தோழரே...! எப்போதும் இடைவிடாது சுவாசித்தாலும் காற்றினைப் பற்றி மனிதன் சிந்திப்பதில்லை...அது எப்போதும் அவனின் புழுக்கத்தை துவட்டும் ஒரு வேலைக்காரன்...மட்டுமே...! சுவாசிப்பில், குடிக்கும் நீரில், உணவில், வெளியில் விரவிக்கிடக்கும் அந்த பிரமாண்டம்...எப்போதாவது கொடுமுகம் காட்டும் போது மட்டும் புயல் என்றுபெயர் சொல்லி அழைத்து பயப்படுவான்...

சரி விடுங்கள்.. இதோ நமது நகர்வு.....நகர்வற்ற நகர்வுதானே...இது! சிறகின் கோணம் மாற்றுவதின் மூலம் நமது திசை மாற்ற முடியும் நண்பரே..ஆனால் அப்படி செய்யாதீர்…இன்று ஒரு நாள் ஏதோ ஒன்று நமது திசையை தீர்மானிக்கட்டும்.

ஆமாம் திசை என்றால் என்ன? ஏதோ ஒரு கணக்கிற்காக சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும் அதன் எதிர் திசை மேற்கு என்றும் மற்ற பிற திசைகள் வடக்கென்றும், தெற்கென்றும் நாம் பிரித்து வைத்து இருக்கிறோம். வெட்டவெளியில் ஏது திசைகள்...? அல்லது எதற்கு திசைகள் எங்கே திரும்புகிறோமோ அது ஒரு பகுதி அவ்வளவே...! அட அடுத்ததாக நம்பிக் கொண்டிருந்த திசை என்ற நம்பிக்கையும் கழன்று விழுந்துவிட்டது தானே....?

இன்னும் கொஞ்சம் சிறகினை அழுந்த வெட்டவெளியினில் பதியுங்கள் தோழர்களே...மேலே..மேலே..மேலே....இதோ அதீத உயரத்தில் நாம்...! வளியின் போர்வைக்குள்ளே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வந்து விட்டோம்....!

என்ன கேட்கிறீர்கள் வளி தாண்டி போக முடியுமா என்றுதானே? முடியும் தோழர்களே.. அதற்கு...மனிதரில் இருந்து இப்போது பறவையாய் ஆனது போல் பறவையிலிருந்தூ சூட்சும ரூபம் கொள்ள வேண்டும். ஆமாம் உடலோடு செல்லல் சாத்தியமன்று... உடல் துறந்தால்.....வளி தாண்டிய வெளியில் மிதக்கலாம்...!

அது இப்போது வேண்டாம்...வாழும் பூமியின் தாத்பரியங்களும், மனிதர்களின், பிறப்பின் அர்த்தங்களும், ஆனந்தத்தின் உச்சத்தையும், அறியாமையின் சொச்சத்தையும் அறிந்து கொள்வோம்....

மிதத்தல்..பறத்தல் இரண்டும் தொடர் நிகழ்வாக இருக்கும் இக்கணத்தில் கொஞ்சம் கீழ் நோக்கி பார்வையை செலுத்துங்கள்...என்ன? என்ன யோசிக்கிறீர்கள்...

ஆமாம் எங்கே இருக்கிறது எல்லைகள் அங்கே? எங்கே இருக்கிறது மனிதனால் வகுக்கப்பட்ட ஜாதியும் மதங்களும்? எங்கே இருக்கின்றன மனிதர்களின் கோபங்கள்? எங்கே இருக்கிறது மனிதர்களின் சந்தோசங்கள்? எங்கே இருக்கிறது வக்கிரமும் பொறாமையும்? எங்கே இருக்கிறது தற்புகழ்ச்சியும் தலைக்கனமும்? எங்கே இருக்கிறது வெற்றியும், தோல்வியும்.....?

இருக்கும் எல்லாம் அதன் அதன் அழகில் இருக்கும் போது நான் மேலே சொன்ன எல்லாம்...மனிதர்களின் மனதுக்குள்ளே தானே இருக்கிறது???? சுற்றுப்புற ச் சூழல் சீராய் இருக்கிறது...! ஓடும் ஆறும், பெய்யும் மழையும், உறுதியான மலைகளும் ஏதோ ஒரு சீரில் இருக்கும் போது மனிதனின் மனத்திலிருக்கும் விசயங்கள் தானே அவனின் வாழ்க்கையையும் சமுதாயத்தின் சூழலையும் தீர்மானிக்கின்றன.

மனிதரின் தலைக்கனங்களும் தன்னைப்பற்றி தானே பெருமை பேசிக் கொள்ளலும் மற்ற மனிதர்களை விட த் தன்னை மிகப்பெரிய மனிதராக காட்டிக் கொள்ளலும் என்று ஒரு வெற்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் அந்த ஒரு லட்ச ரூபாயை வீட்டில் பீரோவிலோ இல்லை வங்கியிலோ குறைந்த பட்சம் சட்டை பாக்கெட்டிலோ வைத்துக் கொள்வதுதானே மரியாதை...

என்னிடம் ஒரு லட்சம் இருக்கிறது என்று சட்டை பேண்ட் முழுதும் குத்திக் கொள்வோமா கரகாட்டம் ஆடுவது போல...? அப்படி குத்திக் கொண்டு ஆட்டம் காட்டுவது தகுதியற்ற செயல் அல்லது தகுதியின்றி கிடைத்த பொருளை எல்லோருக்கும் காட்டி பெருமை காட்டும் ஒரு வக்கிரம்.

இயல்புகளில் சிறப்பு இருந்தால் செயல்கள் செம்மையாகும் அதுவே அந்த மனிதரின் பெருமை பேசும்....ஆனால் வக்கிர மனிதர்கள் தன்னை தானே புகழ்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் தன்னை ஜெயித்தவனாக காட்டிக் கொள்ள எல்லா குறுக்கு வழிகளையும் ஆபாசங்களையும் செயலில் புகுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள்தான் இவர்கள் வாழும் உலகின் பெரும் புள்ளிகள் அதனால் அவர்களின் பிண்டம் விட்டு அவர்களின் நோக்கு நகர்வது இல்லை எப்போதும் தன்னை மிகப்பெரியவனாக நினைப்பவன் அங்கேயே இருந்து கூத்துக்கள் காட்டி கூவி கூவி தன்னை சந்தைப்படுத்துகிறான்.

சிறகடிக்கத் தெரியாத அந்த ஜீவன்கள் அதனாலேயே மேலே வருவதில்லை. மேலே வந்தவனோ தெளிவோடு தலைக்கனமின்றி எல்லாவற்றையும் முழுமையாகப் பார்ப்பவனாக இருக்கிறான். அவனின் புரிதலில் இந்த கோமாளிகளைக் கண்டு அவர்களுக்காகவும் அனுதாபங்களையும் பிரார்த்தனைனைகளையும் செய்பவனாக இருக்கிறான்.

இதோ இதுதான் தோழர்களே நாம் சிறகடித்து மேலே வந்து பார்த்து புரிந்தது. சரி எது என்று தீர்மானிக்கும் திடத்தை உயரிய பார்வை தருகிறது. தவறான எல்லாம் கூட சரி என்று மட்டுப்பட்டு உணரும் மனிதர்களின் சரியான முகங்களும் தெரிய வருகிறது......! வெகுதூரம் வந்து விட்டோம்....ஓரளவு உண்மைகளின் பக்கத்திற்கு வந்திருக்கிறோம். களைத்துப் போயிருப்பீர்கள்.... அதோ... ஒரு மேகக்கூட்டம் வருகிறது தயாராக இருங்கள் ஒரு பரவச குளு குளு குளியலுக்கு.... அது களைப்பினை தீர போக்கும்..!

கடந்து சென்ற மேகக் கூட்டம் நம்மை எவ்வளவு குளுமைப் படுத்தி சந்தோசம் கொள்ளச் செய்தது.. இதோ பாருங்கள் எந்த கர்வமுமின்றி அதன் போக்கில் அது கடந்து சென்று கொண்டிருக்கிறது....இதுதான் வாழ்வின் சாரம் செய்யும் செயலின் பெருமைக்கு நாம் காரணமல்ல.. இது நிகழ்வு அல்லது இயல்பு என்று நினைத்தாலே போதும் பல தலைகள் கனமின்றி இருக்கும்...

அந்தி நேரமாகிவிட்டது தோழர்களே...பறவையாய் பெற்ற அனுபவம் போதும்...இப்போது எதுவும் செய்யாதீர்கள்...சிறகுகளை உள்நோக்கி மடக்குங்கள்...வேகத்தினை சீராக்க அவ்வப்போது சிறகினை புறம் நீட்டி மட்டுப்படுத்துங்கள்... இதோ இதோ.. இதோ.. கீழே வந்து விட்டோம்....இதோ பூமியைத் தொட்டுவிட்டோம்....

மேலே போனது எதார்த்த உண்மை என்னும் சிறகை விரித்து அடித்து....கீழே வந்தது எதார்த்த உண்மை என்னும் சிறகை சீராக மடக்கி.....மேலே செல்வதும் கீழே வருவதும் இயற்கையின் விதி...இதிலே சிறப்பு என்று என்ன இருக்கிறது.....?

ஆனால் அனுபவங்கள் தானே பயிற்றுவிக்கிறது எது சரி? எது தவறு என்று....

கொஞ்சம் எல்லாம் விட்டு விட்டு ....இந்த கட்டுரையும் புறம் தள்ளி விட்டு...அமைதியாக கண்மூடி ஒரு கணம் ஆழமாக சுவாசித்து விட்டு உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்....

சரி எதுவென்று.....??? சரியா.....

உங்களை இறக்கி விட்டுவிட்டேன்.. இனி உங்கள் பயணம் தொடர உங்களுக்குத் தெரியும்...இதோ என் எல்லைகளை உடைத்து.. நான் மீண்டும் பறக்கிறேன்.. மேலே...எனக்கு மிகைப்பட்ட நேரங்களில் எல்லையற்று இருப்பது சரி என்று படுகிறது.....

மீண்டும்....சிறகடிக்கிறேன்......என் வெட்டவெளி வானத்தின் எல்லைகள் தேடி...!

எழுதியவர் : Dheva . S (23-Sep-14, 10:26 pm)
Tanglish : sari
பார்வை : 285

சிறந்த கட்டுரைகள்

மேலே