பட்டாம்பூச்சிகள்

தெக்கித் தெரு முக்கத்துல
திண்ணைவீடு ஓரத்துல
தூணப்புடிச்சி சுத்தும் - அந்த
நேரமெல்லாம் சொர்க்கம் ....!

வடக்கிவய வாழத்தோப்பு
வந்திருச்சாம் வாழப்பூவு...
பூவுபிரிச்சி தேங்குடிக்க
பொடியனெல்லாம் ஓடிப்போவெம்...!!

பொரட்டாசி புதுமழையோ
பூமிய நனச்சிருக்கும்..
ஐப்பசி கொண்டுவந்த
அட மழையுங் கொளம் நெறைக்கும்..!!

நெறஞ்ச கொளத்துக்குள்ள
நீந்துறதே எங்கமொற...
நேரங்கடந்து போக
சோத்தவிட்டதுதெங் ஒத்தக்கொற,,,!!

பளிங்கி வெளையாட்டுல
பழிதீர்த்த முத்துப்பயல
பம்பரங்குத்தி ஒடச்சிருப்பான்
முட்டிகிழிஞ்ச பாண்டிப்பய....!!

அத்தோட தீந்துபோகும்
அஞ்சிநிமிச பகையெல்லாம்...!
கூட்டமா சோடிபோட்டு
குச்சி ஐசு வாங்கப்போவெம்.....!!

முத்துவோட முன்னங்கையி
முருகாயி ஒத்தைச்சடை...
பச்சையம்மா பக்கத்துல
பாண்டிப்பய டிரைவராமாம்...!!

பூவரசப் பொகவண்டி
பூக்களோட குலுங்கியாடும்..
பஞ்சுமுட்டாய் மணிகேட்டு
பாஞ்சிருப்போம் நாங்களெல்லாம் ...!!

அபாகசு அறிஞ்சதில்ல...
ஏரோபிக்சும் ஏறவில்ல....
ஆரோக்கியமா தானிருந்தோம்
அழகான கிராமத்துல....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (30-Sep-14, 8:50 pm)
பார்வை : 306

மேலே