ஆபாசம் - கே - எஸ் - கலை

அண்மையில் பாடகர் ஜேசுதாஸ் அவர்கள் ஜீன்ஸ் குறித்து கூறியிருந்த ஒரு விடயம் குறித்த கருத்தாக இந்த ஆக்கம் அமைகிறது !
----------------
'பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.' – ஜேசுதாஸ்-
---------------------------------------"தினத்தந்தி" வெள்ளிக்கிழமை, அக்டோபர் 03, 2014
----------------

ஆடை எதற்காக அணிகிறோம் என்ற காரணத்தை தாண்டாமல் யாரும் எதையும் அணியலாம்....அப்படி அணியும் போது அது அடுத்தவர் மனதைச் சீண்டாது இருக்கும்!

ஜீன்ஸ் அணிவது ஒன்றும் தப்பானது கிடையாது, சேலை உடலை மறைப்பதை விட அழகாக ஜீன்ஸ்/ சட்டை மறைத்துக் கொள்கிறது என்பது தான் உண்மை !

ஒரு எல்லை தாண்டிய ஆபாசத்தை நோக்கி நாகரிகம் (Fashion) நகர்ந்துக் கொண்டிருப்பது ஜேசுதாஸ் அவர்களை இவ்வாறு பேச வைத்திருக்கலாம் ! அவரது கூற்றில் பண்பாட்டின் அக்கறை கொஞ்சம் தெளிவில்லாமல் வெளிப்பட்டிருக்கிறதே தவிர தவறாக கூறப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது !

இலங்கை இந்தியா போன்ற எமது நாடுகளுக்கென்று ஒரு பண்பாடு இருக்கிறது...அது மிக அழகானது என்பதை உலகமே அறிந்து வைத்திருகிறது! அதற்கான பிரதான காரணம் இந்த ஆடை பண்பாடே !

பெண்கள் எதையும் உடுத்தலாம் இதில் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்க உரிமை இல்லை...ஆனால் இதை இப்படி செய் அல்லது செய்யாதே என்று சொல்வதற்கு அதிக்கம் மட்டுமே காரணமாக இருக்காது என்பதையும் அந்த கட்டளைக்குள் ஓர் அக்கறை ஒளிந்துக் கிடக்கிறது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும் !

மேலாடை இல்லாமல் ஆண்கள் திரிகிறார்களே ஏன் நாங்கள் திரிந்தால் என்ன தப்பு என்று பெண் சமூகம் போர்க்கொடி உயர்த்தலாம் !

ஆனால் பெண்கள் மறைக்கப் பட வேண்டிய உறுப்புகளை மறைக்காமல் உடுத்துகிறார்கள் என்பதால் ஆண்களில் பலரும் ஆணுறுப்பு தெரியுமாறு உடுத்திச் சென்றால் பெண் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா ? இது அருவருக்கத் தக்கதாக இருக்காதா ? இல்லை அது ஆண்களுக்காக சுதந்திரம் என்று கூறி அப்படி வரும் ஆண்களிடம் பெண்கள் சலனமின்றி சகஜமாக பேசிப் பழக கூடிய வாய்ப்பு கிடைக்குமா ?

இந்த விடயத்தில் ஆமாம் எங்களால் முடியும் என்று சொல்லவே முடியாது என்பதை எல்லோரும் அறிவார்கள் !

பெண்ணிய விடுதலை என்பதை வெறும் ஆடைக்குள் வைத்தே வளர்த்து வருகிறார்கள் பெரும்பாலான பெண்ணியவாதிகள் ! இது தப்பு ! ஆடை என்பது பண்பாடு நாகரிகம் சார்ந்த ஒரு விடயம் ! இதில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் நமக்கான பண்பாட்டு நாகரிகத்தை கொச்சைப் படுத்தாமல் இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ளல் சிறப்பு ! அவசியம் !

நாம் மட்டும் தனியாக இருக்கும் இடத்தில் அணிந்தாலென்ன அணியாவிட்டாலென்ன ?சுருக்கமாக சொல்வதாயின் ஆடை என்பது பிறருக்காக தான் அணிகிறோம். எனவே அணியும் விடயத்தில் பிறரின் உணர்வுகளை மதித்தே அணிய வேண்டும் !

நவநாகரிகம் என்பது வேறு ஆபாசம் என்பது வேறு ! எந்த நாட்டினுடைய உடை முறைகளைப் பின்பற்றி அணிந்தாலும் அதில் தப்பில்லை ! ஆயினும் ஆடை என்பது அழகாகவும், அருவருப்பில்லாமலும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து !

மேலைத்தேய பண்பாடும் எம்முடைய பண்பாடும் எப்போதும் எல்லாவற்றிலும் ஒத்துப் போக மாட்டாது ! மேலைத்தேய பண்பாட்டை நாம் பின்பற்றுவது தப்பில்லை...ஆனால் நமது பண்பாட்டை நாம் அழித்துக் கொள்ளக் கூடாது ! இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமப்பங்கு இருக்க வேண்டும் !

ஜேசுதாஸ் அவர்கள் கூறிய ஜீன்ஸ் அணியக் கூடாது என்ற பொதுவான கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர் ஆபாசமாக அணிவது சரியில்லை என்ற தொனிப்பொருளின் கீழ் தான் அதனைச் சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும் ! ஜீன்ஸ் அணியுங்கள் தாரளாமாக. ஆனால் ஆபாசமாக அணியாதீர்கள் !

இதனை பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் பொதுவாகவே சொல்லுகிறேன். சில ஆண்கள் இடுப்பிற்கு கீழே காற்சட்டையை இறக்கி புட்டத்தில் அரைவாசி தெரியுமாறு அணிந்துக் கொண்டு போவதும் ஆபாசம் தான் !

வெறுமனே பெண்ணியம், பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று கூறி அருவருக்கத் தக்க விடயங்களை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவது அபத்தமானது !

உடை என்பது உணர்வுகள் உணர்சிகள் இரண்டையும் சீண்டக் கூடியது.
எனவே எதை உடுத்துவது என்பதில் எந்தக் கட்டுப்பாட்டையும் வைத்துக் கொள்ளத் தேவையில்லை, ஆனால் எப்படி உடுத்துவது என்பதில் தேவையான அளவு கட்டுப்பாட்டை எல்லோரும் வைத்துக் கொள்ளுவோம் !

உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதைப் போன்ற அளவிற்கு சரி கட்டுப்பாட்டை உடையில் வைத்துக் கொள்ளுவோம் ! அழகாய் இருக்கும் நமது பண்பாட்டுச் சூழல் !

(இணைத்திருக்கும் படத்தை ஆபாசமான புகைப்பட பிரிவிற்கு பரிந்துரை செய்ய எவருக்கும் உரிமை உண்டு ! இந்த படம் அவ்வாறன ஒரு பரிந்துரையின் கீழ் அகற்றப் பட்டால் நான் சொல்ல வந்த விடயம் பலருக்கும் புரியும் என்றெண்ணுகிறேன் !)

எழுதியவர் : கே.எஸ்.கலை (4-Oct-14, 9:13 am)
பார்வை : 668

மேலே