ஏன் பிறந்தாய் மகனே

டேய் சேகரு...

சொல்லு முத்து

உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?

என்ன சொல்ல வர?

உனக்கு 8 வயசு இருக்கும் போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்கதான் உன்னை என்னா நல்லா வைச்சிருந்தாங்க.. அவங்க போன பின்ன இந்த 4 வருஷத்தில் உனக்கு என்ன கஷ்டம். உன்ன பார்க்கையில் மனசுக்கு ரொம்ப விசனம்.. எப்படி இருந்த நீ...




ஆமா முத்து, நானும் எங்க அம்மாவை நினச்சி அழாத நாள் இல்ல. என்ன செய்றது. நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். அம்மா போனாலும், ஆண்டவன் புண்ணியத்தில் எங்க அப்பா ஒரு நல்ல மனுஷன், அவர் என்ன நல்லாதானே கவனிக்கிறார்.

என்ன சேகர் முட்டாள்தனமா பேசுற.. உங்கம்மா செத்து ரெண்டே வருஷதுள இன்னோர் பொம்பளைய அவர் கல்யாணம் பண்ணி கொண்டாரே.. அவரை போய் நல்லவர் அது இதுன்னு..

இல்ல முத்து.. எங்க அப்பா அம்மா இறந்தவுடன் கல்யாணமே வேண்டாம்னு தான் இருந்தார். அவர் அக்கா தங்கச்சிங்க தான், அது தான் என் அத்தை மார்கள்.. பிள்ளைக்காக... எனக்காக கல்யாணம் பண்ணி கொள்ன்னு அவரை நிர்பந்தபடுத்தி ரெண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

அது சரி, சேகர்.. உங்க சித்தி தான் உன்னை அன்பா கவனிக்கிறது இல்லையாமே.. எப்ப பாரு உன்னை சனியன் சனியன் திட்டுறாங்கன்னு கேள்வி பட்டேன்னே.

அப்படி ஒன்னும் இல்ல முத்து. அவங்க கொஞ்சம் முன் கோப ஆளு தான். இருந்தாலும் ரெண்டாம் தாரம எங்க அப்பாவை கல்யாணம் பண்ற அளவிற்கு பெரிய மனசு உள்ளவங்க. அப்ப இப்ப திட்டினாலும் பரவாயில்லை.

என்ன சேகர்.? உன்னை அடிக்கிறாங்க.. ரொம்ப கேவலமா நடத்துறாங்க.. உங்க அப்பா வீட்டில் இருக்கும் போது நடக்குறதே வேறே அவர் வெளியே போனவுடன் நடக்குறதே வேறேன்னு கேள்வி பட்டேனே.

அதை விடு முத்து.

போடா முட்டாள்.உன் இடத்தில நான் இருந்தேனே, இந்நேரம் வீட்டை விட்டு ஓடி இருப்பேன்.

என்னடா சொல்லுற?

இந்த மாதிரி ஒரு பொம்பளையிடம் மானம் கேட்டு பிச்சைகார வாழ்க்கை வாழ்வதை விட வேற ஏதாவது ஊருக்கு ஓடி போய் கூலி வேலை செஞ்சி சந்தோசமா இருக்கலாம்.

அப்படியா.. நமக்கு யாருடா வேலை தருவா?

டேய்... போன மாசம் கூட பக்கத்துக்கு தெரு ரங்கன் காணாம போனான் இல்ல. அவன் கூட பட்டணத்தில் போய் ஒரு ஆடோ ரிப்பேர் கடையில் சேர்ந்து நல்லா இருக்கானு சொல்றாங்க.

பட்டணத்திற்கு போக காசு வேண்டுமே...

இந்தாடா 100 ருபாய், டிச்கேட்க்கு 50 சில்லறை தான் ஆகும். மீதிய வேலை கிடைக்கிற வரைக்கும் செலவிற்கு வைத்து கொள். உயிரே போனா கூட திரும்ப வராத. அப்படியே நீ திரும்பி வந்தாலும் இங்கே உங்க சித்தி உன்னை அடிச்சே கொன்னுடுவாங்க.

இந்த ஸ்கூல் பையை என்ன பண்றது?
.
என்னிடம் கொடு. பக்கத்தில் ஆத்துல போட்டுடறேன். அதை பார்த்தாங்கனா நீ ஆத்துல தான் அடிச்சின்னுபோயிட்டேன்னு எல்லாரும் நம்பிடுவாங்க.

முத்து.. அப்பா தேடுவாரே டா..

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ இருக்கிரனாலதான் வீட்டிலே வேற பிள்ளை வேண்டாம்னு உங்கப்பா சொல்றாருன்னு உங்க சித்தி எல்லாரிடமும் சொல்றாங்கன்னு கேள்வி பட்டேன்.

அப்படியா? சரி டா, இந்தா பிடி பையை... நான் கிளம்புறேன். நண்பன்னா நீதாண்டா...

என்று சொல்லிவிட்டு அடுத்த ரயிலில் சேகர் ஏறினான்.. எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல். அந்த ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அங்கே நின்று விட்டு முத்து நேராக சேகர் வீட்டிற்கு ஓடினான்..

அக்கா, முத்து வந்து இருக்கேன்..

என்ன ஆச்சி முத்து.. அந்த சனியன் ஒழிந்ததா?

ரொம்ப ஈசி அக்கா. நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே பேசினேன், அப்படியே நம்பிட்டான். நீங்க கொடுத்த 100 ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டேன்.

ரொம்ப நல்லது. திரும்பி வருவான்னு நினைக்கிற?

வரவே மாட்டான் அக்கா.. கண்டிப்பாக வரமாட்டன்.

சரி இந்தா 25 ருபாய், நான் பேசின காசு. இந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாது..

அதை வாங்கி கொண்டு முத்து .. சிறித்து கொண்டே ஆற்றை நோக்கி சென்றான்.

பின் குறிப்பு ; நான் பாம்பில் வாழ்ந்து கொண்டு இருந்த நாட்களில் ஜெயகுமார் என்ற நண்பர் ஒருவர் எங்கள் அறையில் இருந்தார். Fiat நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிந்து கொண்டு இருந்தார். வார இறுதி ஒரு நாளில் என்ன ஜெயகுமார் உங்கள் பொழுது போக்கிற்கு என்ன செய்வீர்கள் என்று நான் கேட்ட போது கதை எழுதுவேன் என்றார். எங்கே நீங்கே எழுதிய கதையில் ஒன்றை சொல்லுங்கள் என்று நான் கேட்க அவர் கூறிய கதை இது. வருடங்கள் பல ஆகினும் மனதில் தங்கி விட்டது.என்னை போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எழுதியவர் : (12-Nov-14, 11:51 am)
பார்வை : 262

மேலே