பணமா பாசமா அக்கா

ஒரு தாயின் கருவில்
உருவான ஈருயிர்கள்
உணர்வாலும் உதிரத்தாலும்
ஒன்றாகி பிறந்தோமடி!

கன்றோடு பசுவாய்
ஒருமார்பை சுவைத்து
நன்றாக வளர்தோமடி!

ஆணிவேரான நம்தந்தை
பஞ்சத்தில் விழுந்து
பரலோகம் போனானடி!

மண்ணாக இருந்தாலும்
மன்னனாக எண்ணி நம்தாய்
நோய்தனில் சரிந்தாளடி!
பாதியில் நம்மை தவிக்க விட்டு
பதி தேடி பரலோகம் போனாளடி!

ஊரெல்லாம் உறவிருந்தும்
ஒருவேளை உணவிற்கு வழியின்றி
நம்நெஞ்சத்தால் அழுதோமடி!

பிறர்க்காக வாழ்ந்து
பெருஞ்செல்வத்தை இழந்து
பஞ்சத்தில் விழுந்து
பரலோகம் போன தந்தையை எண்ணி !

நெஞ்சு பொருக்காதிருந்தாலும்
ஊரெல்லாம் தானத்தால் தந்தையை போற்ற
குடும்பத்தின் புகழ் விளங்க
உள்ளுக்குள் அழுதாலும் செய்த
நன்மையென்னி தினம் ஆறுதல் கொண்டோமடி !

காய்ச்சலில் நான் விழ மனம் துடித்து
பலர்வீடு பாத்திரத்தை நீ தேய்த்து
தாயாகி எனை காத்தாயடி !

பாட்டன் கட்டிய பள்ளியில்
மழைக்கு ஒதுங்ககூட நமக்கு
கொடுப்பினையிள்ளையடி!

காலங்கள் மாற ...
உன் உழைப்பில் எனை
பள்ளியில் சேர்த்தாயடி!

நம் கஷ்டமுணர்ந்து
கசடற கல்வியும் கற்றேனடி!
அன்னையும்பிதாவும் நீதானென
நெஞ்சத்தில் பூசிக்க...
நிலைமைகள் மாறுமென
கனவிலும் நினையேனடி!

இருவரும் வளர்ந்தோம்
இளமை காலங்களை
இனிமையாய் களித்தோம் !

திருமண வாழ்வில் நீ நுழைய
துயரத்தில் அழுதேனடி
எல்லோர் வாழ்விலும் இயல்பென
என்னை நானே தேற்றிகொண்டேனடி!

தனிமரமாகி தவித்து பின்
தோப்பாகி மனமகிழ்ச்சி கொண்டேனடி
இதயத்துள் உனைவைத்து
இல்லறத்தில் சிறப்புற்று நானிருக்க...

உனக்குள் என்னாச்சு!!
உள்ளமெல்லாம் மண்ணாகி
காண்பதெல்லாம் பொன்னாகி
பணப் பைத்தியமானாயடி-என் மேல் வைத்த
பாசமேங்கே போனதடி?!!

முன்பொருநாளில்...
பிள்ளையில்லா பெரியோர்
எனை தத்தெடுக்க உனைகேட்க
பணமா? பாசமா? போராட்டம் உனக்குள்
பாசம்தானே வென்றது! - அது தானின்று
என் முன்வந்தெனை கொன்றது !

உறவுகள் ஒதுங்கிருக்க
நீ தானே உயிரானாய் !
நீ பணமெனும் போர்வையில்
எனை மறைத்தால் என்நிலைமை என்னாகும்?

இன்று மீண்டும் ...
அதே போராட்டம் இருவற்குள்ளும்
பணமா? பாசமா?

உன்மனம் பணமெனச் சொல்ல
என் மனம் மோசம் போக
எல்லாமே வேசமோ ?
நெருப்பாகி கொதிக்குதடி
உன்மேல் கொண்ட வெறுப்பு !!

எழுதியவர் : கனகரத்தினம் (18-Nov-14, 11:13 am)
பார்வை : 229

மேலே