தமிழின் அகவையே தலைவனின் அகவை - தமிழன் பரிதி வருங்கால உழவன்

தமிழின் அகவையே தலைவனின் அகவை! - தமிழன் பரிதி வருங்கால உழவன்

தமிழை எழுதச் சிந்தை கேட்டேன்...
தமிழே தந்த வார்த்தை நீயே!
அன்னைத் தமிழை அவனியில் இனிமேல்
ஆள வைக்க வந்தவர் நீயே!

உலகில் உயிரிகள்
உயிர்ப்பொடு வாழ...
உழைப்பவன் இங்கே உழவன் என்றால்,
வீரம் விதைத்து; விடுதலை அறுக்க...
வேளாண் செய்யும் உழவன் நீயே!

ஆதியைக் கண்டு அந்தம் தேட...
அங்கும் பொருளாய் நிற்பவர் நீயே!
தத்துவம் கொண்டு எதையும் தேட...
தவத்தின் பயன்போல் தெரிபவர் நீயே!

உன்னைக் கண்டு கயவன் கொள்ளும்
அச்சத்திற்கோர் அர்த்தம் கேட்டேன்...
இரும்புப் பறவையின் இருப்புக் கூட்டை,
இருட்டு வழியில் இல்லா தொழித்த...
கட்டுநாயகா கதையைச் சொல்லும்
வரலாற்றுருவில் நானே கண்டேன்!

வாழ்வின் இயல்பில் நான்கைப் பார்த்த
கௌதமன் இங்கே புத்தன் என்றால்...
ஏற்றுக் கொண்டு வழிபட இங்கு
சிந்தனை மிஞ்சும் கூட்டம் உண்டு.
வாழ்க்கைத் துளியின் வழியில் நின்று,
வதைத்தவர் கண்டு, சிதைத்திட எண்ணிச்
சீறிப் பாய்ந்த வேலுவின் பிள்ளை...
உன்னை வழிபட நானும் உண்டு!
தடுப்பார் அறிவில் தெறிக்கும் குண்டு!

உன் உடலுக்கிங்கே அகவை அறுபதாம்!
உன் அறிவுக்ககவை எத்துணை என்பதை
அறிந்தவன் நானே ; அறிவிப்பேனே...
மனிதன் பார்க்கும் தமிழின் அறிவு
ஐந்து ஆயிரம் ஆண்டின் உடனே...
மனிதன் பார்க்கா தமிழின் அறிவு
பல்லாயிரமும் சேர்ந்தது தானே!

எழுதியவர் : தமிழன் பரிதி வருங்கால உழவ (19-Nov-14, 7:17 pm)
பார்வை : 96

மேலே