வணக்கம் தலைவா

அதிர்ந்திடும் அண்டம்
நடுங்கிடும் கண்டம்
இவன் பெயர் சொன்னால்
நிமிர்ந்திடும் நெஞ்சம்...
துளிர்விடும் வஞ்சம்
துரோகிகள் நஞ்சும்
எமனையும் மாஞ்சும்
இவனையா மிஞ்சும்...?
இவன்தான் வீரன்
கரிகால் பேரன்
தமிழர்கள் தொழுதிடும்
செங்கொடி மாறன்...
மறத்தமிழ் தீரன்
அதிகாய சூரன்
அதிகாரப் பேய்களை
விரட்டிட்ட சோழன்...
சக்கர வியூகங்கள் ஊடறுப்பான் - பல
சதியர்கள் குதிகால் நரம்பெடுப்பான்
சீட்டாப் புலிபோல் திமிரெடுப்பான் - நம்ம
தமிழன்னை ஒருத்திக்கே தலையசைப்பான்...
கருணையில் கர்ணனை தோற்கடிப்பான் - அட
களத்தினில் எதிரியின் கருவறுப்பான்
கிடைகளில் உழர்ண்டிடும் நரிபிடித்து
நைய்யப் புடைத்தே தோலுரிப்பான்...
தமிழே கடவுளாய் தினம் தொழுதான்
தனியே அதற்கென நிலமுழுதான்
தன்னிலம் எவனுக்கும் இல்லையென -இவன்
தரணியின் முன்பே முரசறைந்தான்...
தமிழரசொன்றை உயிர்ப்பித்தான் - அதை
தனியரசென்றே உரைத்திட்டான்
உலக சதிகளை எதிர்த்திட்டான்
உண்மைத் தமிழனை அணைத்திட்டான்...
தமிழர் வீரத்தை நிறுவித்தான் - இவன்
தனிப்பெரும் தலைவன் ஆகிட்டான் - இந்த
சரித்திர நாயகன் வரலாறாய் - நம்
தமிழர் மனங்களில் நிலைத்திட்டான்...
வணக்கம் தலைவா எம்தலைவா
வாழ்க வாழ்க பல்லாண்டு - நீ
விதைத்த வீரம் சோராமல் - நாங்கள்
களத்தில் நிற்போம் உம்மோடு...!
-----------------நிலாசூரியன்.
(தலைவரின் 60 வது பிறந்த நாளிற்காய்)