மீண்டும் ஒரு வாய்ப்பு தா தோழி
உடல் வலிக்குமென்று எண்ணி
ஓய்வெடுத்தே துருபிடித்து போனேன்...
வியர்வை பெருகுமென்று எண்ணி
விதிவழியே வாழ்வென்று இருந்தேன்...
பக்குவமாய் நீ சொன்ன வார்த்தையெல்லாம்
புறக்கணிக்கப் பட்டிருந்தது என்னால்...
நாள் பட நாள்படத்தான் எல்லாமே புரிந்தன எனக்கு.
கால தடம் கடந்து என் நரம்புகள் அறுந்தன...
கால்கள் நடை மறந்து எலும்புகள் முறிந்தன...
எல்லாம் கடந்தது...
எல்லோரும் கடந்தார்கள்...
நாய்கள் கூட மதிக்கவில்லை என்னை.
உன் வார்த்தையை கேட்க்காத என்னை
உலகமே வெறுத்தது போலிருந்தது.
தனிமை எனை சூழ
தடதடத்து நின்றேன்...
ஈவிரக்கமற்ற ரணங்களால்
இமை கடந்து வழிந்தேன்...
யாருமற்ற வெளியில் நான்
அழுது என்னவாக போகிறது? என்கிற கேள்வி வேறு.
இதயத்தில் ரத்தம் சுண்டிய சத்தம்
இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது பார்.
வெக்கம் பிய்த்து தின்னும்
வெண்ணிரவில் மனம் புரண்டபடியே இருக்கிறது உன்னால்.
வெக்கமில்லாமல் கேட்க்கிறேன்
மீண்டும் ஒரு வாய்ப்பு தா தோழி.