காதலர் தினம்

இந்த நாளில்.....

இதுவரையில் எழுதப்படாத எனது கவிதை வரிகளுக்காக காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றத்தின் உச்சத்தில் வலியோடு நான் உன்னை மறந்து போனதாகக் கூட நீ கருதி இருக்கலாம்...

இப்போது என்னிடம் நீ ஒன்று சொல்....

ப்ரியத்தையும் நேசத்தையும் ஏதோ ஒரு சொல்லிலோ அல்லது நாளிலோ நாம் அடைத்து விட முடியுமா என்ன? இந்த உலகத்தின் எல்லா பக்கங்களிலும் பொய்யே தன்னை உண்மை என்று அறிவித்தபடி நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. சூழலுக்குள் அகப்பட்டுக் கொண்டு, மனோவசியம் செய்தது போல இதோ, இன்றுதான் இந்த கணத்தில் காதலுக்கான நாள் பிறந்திருக்கிறது ஆதலால்...

உங்களை நேசிப்பவர்களிடம் நேசத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அடையாளமிட்டுக் கொண்டாடிச் செல்ல காதல் ஒன்றும் கணக்குப் பாடம் இல்லைதானே பெண்ணே...!

ஒரு பெளர்ணமி நாளில்...வாழ்க்கையின் எந்த சிக்கலுமில்லாத வினாடிகளில் நாம் மிதந்து கொண்டிருந்த அந்தக் கணத்தை, உனக்கு முதன் முதலாக நான் கடிதமெழுதிய பொழுது இருந்த உற்சாகத்தை, அதை நீ வாசிக்க ஆவலாய் பிரித்துக் கொண்டிருந்தபோது உனக்குள் ஏற்பட்ட அந்த படபடப்பை, முதல் முறையாய் உன் கரம் பற்றிய போது நமக்குள் பரவிய கததப்பினை....

எதிர் எதிரே அமர்ந்து கொண்டு பகிர வார்த்தைகளின்றி பரவசமாய் ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கிக் கொண்ட அந்த அற்புத அனுபவத்தையெல்லாம் காதலர் தினமென்ற ஒரு நாளிடம் கொடுத்து விட்டு இதோ இன்று உன்னை நான் நேசிக்கிறேன்....இந்த நாள் புனிதமானது அல்லது புரிதல் நிறைந்தது என்று இந்த நாளை அடையாளப்படுத்திக் கொள்வதில்...

எனக்கும், என்னுள் உயிராய் வசிக்கும் உனக்கும் உடன்பாடு இருக்காது என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளப் போவதில்லைதான்...

என்றாலும்....

இப்படியாய் நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த வார்த்தைகளை இந்த ஒரு நாளுக்காய் நான் எழுதியதாகத்தான் இந்த உலகம் கருதிக் கொள்ளும்.

என் வார்த்தைள் எந்த ஒரு நாளுக்கானதும் இல்லை.... அது எந்த நாளும் உனக்கானது மட்டும்தான் என்பதை....

என்னைப் போலவே நீயும் ரகசியமாய் உன்னுள் வைத்திருக்கிறாய் தானே...?!

எழுதியவர் : தேவா சுப்பையா... (14-Feb-15, 7:32 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : kathalar thinam
பார்வை : 263

சிறந்த கட்டுரைகள்

மேலே