அமிலமே நீயும் பன்னீராக மாறுவாய்…

அகிலமே காதலர்களுக்கு
வாழ்த்து சொல்ல……!
அமிலமே நீ
காதலிகளின் முகங்களை
சிதைப்பதேனோ?

கழிவறையில் கழிவுகளை
கழியும் நீ…….!
காதலையும் கழிவென்று
நினைத்தாயோ?

சோதனை கூடத்தில்
சாதிக்க வேண்டிய நீ……!
காதலர்களுக்கு
சோதனை தரலாமோ?

வெண்ணிலவை வேல் பாய்ச்சி
சிதைக்க முடியுமா?
தென்றலை தணல் கொண்டு
எரிக்க முடியுமா?
திரைகடலொடியும் தேடிடும் காதலை
திராவகம் ஊற்றி தீர்த்திட முடியுமா?

காமத்தை ருசித்து அதை
காதல் எனச் சொல்லும்
கயவர்களுக்கு
கைகூலியாகாதே……!

தோட்டத்தில் மலர்ந்த ரோஜா
காதல் தேசத்தில்
கதாநாயகனாக
காதலர்கள் கையில்……!
நீயோ காதலர்களை வேதனையாக்கி
காதல் ஓவியத்தின்
ஓரத்தில் கறைபடிந்தாயே……!

ரோஜாவுக்கு காதல் கடிதம் எழுது……!
காதல் வாழ்த்து அட்டையோடு
கொஞ்சி குலாவு…….!
அவர்களிடம்
காதல் பாடம் கற்றுகொள்……!

கடற்கரைக்கு சென்று உலவு……!
காதல் அலையில்
உனக்கும் காதலி கிடைப்பாள்……!
அப்போது நீயும் கரைந்து
பன்னீராக மாறுவாய்…….!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (21-Feb-15, 10:02 pm)
பார்வை : 94

மேலே