உயிருள்ள உயில்

என்ன தலைப்பிடலாம் ?..
எப்படி துவங்குவது?...
எண்ணத் திருந்துவரும்
இனிய கவிதையினை?..

உணர்வில் கலந்திருக்கும்
உயிரில் உறைந்திருக்கும்
உண்மை கவிதையிதை
உரைப்பதிங்கு எவ்வாறு?..

வார்த்தைநயம் எண்ணி
வர்ணனைகள் சேர்த்தாலோ
வளமான கவிதைவரும்;
வந்திடுமா முழுஉணர்வும் ?

எழுதும்முன் நான்ருசிக்கும்
ஏகாந்த சுகமதுவும்
பழுதறவே கிடைத்திடுமா
படிக்கின்ற அனைவருக்கும்?...

கண்ணீர் ஊற்றெடுக்கும்
கனமான அனுபவங்கள்
காகிதத்தில் நான்வடிக்கும்
கவிதையிலே தெரிந்திடுமா?...

காதல் இரசவாதம்
காமத்தின் ஊடல்கள்
கண்மூடி நான்பார்க்கும்
காலத்தின் பெருவெளிகள்....

எனக்குள்ளே இருந்துவரும்
ஏராள சிந்தனைகள்
கணக்குகளே இல்லாத
கற்பனைகள், கடுங்கோபம்

இருக்கட்டும் இருக்கட்டும்
எப்போதும் எனக்குள்ளே
என்றாவது ஒருநாள்
அவைதோன்றும் உனக்குள்ளே

நீயும் எழுதாதே !
நிசங்கள் சொல்லாதே !
சாயும் வேளையிலே
சத்தமின்றி முணுமுணுப்போம் !

எழுதியவர் : அபி மலேசியா (2-Mar-15, 9:43 am)
பார்வை : 91

மேலே