என் வழியில் நான் இருக்கிறேன்
கனவுகளிலேயே வாழ்ந்து மடி
என்றது அன்று உன் சோகக் குரல்!
நானும் விழித்திருந்த போதும் கூட
உறங்கினேன் ..கனவுகளுக்காக
உன்னைப் பற்றிய கனவுகளுக்காக!
உன்னோடு வாழும் காட்சி தரும் கனவுகளுக்காக!
நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்..
கனவுகளோடு..உன் காட்சிகளோடு!
என் பாடலுக்கு நீ வாயசைப்பதும்
உன் வாயசைப்பிற்கு நான் பாட்டெழுதுவதுமாக
நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்..என் கனவுகளில் !
உன்னோடு குடும்பம் நடத்துகிறேன்..
உன்னுடைய என் பிள்ளைகளை கொஞ்சுகிறேன்
உன்னோடு படுத்துக் கொண்டே
உச்சி நிலாவினை கண்டு மகிழ்கிறேன்..!
எதற்காக திடீரென்று நேற்று வந்து இனி
கனவுகள் கலைத்து விடு
என்று சொல்லிச் சென்றாய் ?
உன் உடலை நான் கேட்கவில்லை..
உன் மனதை நான் கேட்கவில்லை..
என்னை இப்படியே இருக்கவிடு
என்றுதான் கேட்கிறேன்..!
உன் வழியில் நீ போகலாம்
நான் தடுக்கவில்லை..
என் வழியில் நீயும் வராதே
கனவுகளை கலைக்கச் சொல்லி..!
இப்படியே நான்
இருந்து விடுகிறேன்..!
இப்படியே நான்
இருந்து ..
விடுகிறேன் என் உயிரை!
நீ
எப்படியாவது போ!
எனக்கதில் ஆட்சேபம் ஏதுமில்லை!