சொல்லொன்று செயலொன்று------------அஹமது அலி----

ஓய்வில்லாத வேலைக்கான
பட்டியலை மருமகளிடம்
வாசித்து விட்டு
பெண் கொடுமைக்கெதிராய்
போராட புறப்பட்டாள்
மகளிர் சங்க தலைவியுமான
மாமியார்.............!

@

கற்பு பற்றிய
கருத்தரங்கில்
பேசிக் களைத்து
சிவப்பு விளக்கு பகுதியில்
ஓய்வெடுத்தார்
கற்புக்கரசன்.....!

@

"ஒருவனுக்கொருத்தியே
இல்வாழ்க்கையின் சிறப்பு"
பட்டி மன்றம் முடிந்து
சின்ன வீட்டிற்கு வந்தார்
பேச்சாளர்........!

@

தீண்டாமைக்கெதிரான
போராட்டத்தின் போதும்
தன்னை யாரும் தீண்டாதவாறு
பார்த்துக் கொண்டார்
கட்டிப்புடி கட்சியின்
தலைவர்........!

@

அகிம்சை போதிக்கும்
வகுப்பொன்றில்
தற்காப்பிற்காக துப்பாக்கியை
இடுப்பில் சொருகிக் கொண்டார்
ஆசிரியர்.......!

@

நன்மறைகளை எடுத்தோதி
நன்முறைகளை எடுத்தேந்திய
வன்முறை ஒழிப்பு மாநாட்டில்
வன்முறை செய்முறையாய்
வெடித்தது.......!

@

தீவிரவாதத்திற்கெதிரான போரென்று
சிறுவர்கள், முதியவர்கள்,
பெண்கள், அப்பாவிகள் என
லட்சம் பேரைக் கொன்றொழித்து
திருப்தி பட்டுக் கொண்டனர்
மி(ம)த வாதிகள்.....!


=========================================
சொல்லொன்று செயலொன்று செய்வார்
உள்ளொன்று புறமொன்று வைப்பார்
பிறரன்று மனிதரென்று கூறி நிற்பார்
இவரென்று மனிதராய் ஆகிச் சிறப்பார்
=========================================

எழுதியவர் : அஹமது அலி (9-Mar-15, 10:07 am)
பார்வை : 215

மேலே