ஆழ்மனதின் அன்னையே - இராஜ்குமார்

ஆழ்மனதின் அன்னையே
~~~~~~~~~~~~~~~~~~

உறவின் மீதங்களைப் பிடித்து
உயிர் மொழியில் தொகுத்தீர்..
வன் வாதங்களைத் தவிர்த்து
அறிவால் வறுமை ஒழித்தீர் ..

பாசத்தின் படிமங்கள்
பக்குவத்தின் பாலங்களென
வார்த்தையின் புன்னகையால்
வார்த்தெடுத்தீர் தாய்மையை ..

புரியாமைப் பொழுதினை
எம் புலமையின் விழுதாக்கி
விரக்தியின் விரல்களை
நறுக்கி வீசிய நகலையும்
எரித்துப் புதைத்தீர் சுடராய் ...

பக்திகளின் யுக்திகளே
ஆயுட்கால ஆதாரமென
சிந்தைக்குள் சித்திரமாய்
துயரமெல்லாம் துரத்திய
கலசத்தின் தேகத்தில் கவியானீர் ....

காதலின் கனங்களை
தாளோடு தவிர்த்தவனை
நிஜத்தின் நீளுமையோடு
மாயைகளின் ரேகைகளை
சாயல் உதிர்த்த சரிகளென
எமை மீட்டீர் மின்மினியாய் ..

பிரியங்களின் பிரிவுகளை
சிகரத்தின் சரிவுகளென
தனிமையின் வேதங்களை
தவழும் தங்கச் சிமிரென
பனிவெளிப் பயத்திலும் பாதையானீர் ...

உள்ளவரை உயிர் மொழியும்
உள்மனதில் உதிரம் துடிக்கும்
உறவே உதிரும் நிலைவரினும்
அகமே அசையா அதியசமாய்
யுகத்தின் முகத்தின் விழியாவேன் ..!

திசையெங்கும் திறனில் மிளிர்ந்து
மனமெங்கும் மதியொளியாய் ஒளிர்ந்து
சரியாமல் கடக்கும் கால்தடம்
சரித்திர நிழற்படமாய் பதிய
பிறவாத மகன் பிரியமாய் தூவும்
பிறந்த நாள் வாழ்த்தை
கைக்குள் கடலெனும் காட்சியாய்
விழிக்குள் துளியாய் வரையுங்கள் ....


- இராஜ்குமார்

நாளை ..16-03-2015 - இல் பிறந்தநாள் காணும் ....
எம் ஆழ்மனதில் அன்னையாய் வாழும் எனது அண்ணிக்கு...சமர்ப்பணம் ...

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (15-Mar-15, 11:53 am)
பார்வை : 8153

மேலே