சாதிக்க மறவாதே

சீதனம் வாங்கி திருமணம் முடித்து
==சீர்மிகு அன்பை எதிர்பா ராதே!
வேதனம் கொடுக்கும் முதலா லியன்பை
==விசுவா சித்து ஏமா றாதே!
காதலாய் உருகும் கணிகையர் நடிப்பை
==கண்ணகித் தனமாய் கண்கொள் ளாதே!
பாதகத் தனங்கள் பாரினில் ஆயிரம்
==பார்த்து அறிய மறந்து விடாதே!

நூதனக் கொள்ளை காரரின் முன்னே
==நுணல்போல் வாயால் கெட்டு விடாதே!
கூதலுக் கேற்றப் போர்வை என்றே
==குடிக்கும் பழக்கம் கொண்டு விடாதே!
ஈதல் நலமே என்னும் நினைப்பில்
==இருப்பதை எல்லாம் இழந்து விடாதே!
வாதம் வம்பு பண்ணிப் பண்ணி
==வருங்கா லத்தை சிதைத்து விடாதே!

பேதமை வளர்க்கும் பேய்களை நம்பி
==பேரிடி தன்னை வாங்கி விடாதே!
சோதனை என்பது யார்க்கும் உண்டு
==சோர்ந்து மூலையில் படுத்து விடாதே!
வேதனை சகித்து விதியினை எதிர்த்து
==வெல்லும் முயற்சி விட்டு விடாதே
சாதலும் வந்து சேரும் முன்னே
==சாதனை புரிய மறந்து விடாதே!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Jun-15, 4:02 am)
பார்வை : 127

மேலே