தலைமுறையை சீரழித்தார்

தலைமுறையை சீரழித்தார்


குடிகெடுக்கும் குடியென்றே விளம்ப ரங்கள்
குடிக்கின்ற இடத்தினிலே வைத்து விட்டு
குடிப்பதற்கு வசதிகளைச் செய்து தந்து
குடிமக்கள் அரசென்றே பெயரைப் பெற்றார்
குடிமக்கள் எனுப்பெயரை நிலைநாட் டற்குக்
குடிப்பதுவே தொழிலாக இளைஞர் கூட்டம்
குடிபெருக்கி அரசுக்கு வருவாய் பெருக்கிக்
குவிக்கின்றார் உடல்தன்னில் நோய்பெ ருக்கி !

நீர்தடுத்தே அணைகட்டிப் பயிர்வ ளர்த்து
நிதம்உழைப்பால் வளம்செழிக்க வைத்த நாட்டில்
நீர்கடைகள் தெருவெல்லாம் திறந்து வைத்து
நிறையுழைப்புத் தோள்களினைத் துவள வைத்து
ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்த போல
ஊர்நடுவே மதுக்கடைகள் திறந்து வைத்துப்
பார்எங்கள் வளர்ச்சியென்றே மக்கள் வாழ்வைப்
பாழ்செய்து பெற்றபணம் காட்டு கின்றார் !

கல்லூரி பள்ளிகளின் எதிரில் வைத்து
கற்பதற்குப் பதில்குடிக்கக் கற்க வைத்தார்
நல்லோர்கள் நெஞ்சமெல்லாம் வெடிக்கு மாறு
நான்ககவை குழந்தையையும் குடிக்க வைத்து
பல்லோர்கள் பார்க்கபடம் எடுத்த னுப்பிப்
பார்தூற்ற தலைமுறையைச் சீர ழித்தார்
எல்லோரும் அழியுமுன்னே கடைகள் மூட
எழுந்திடுவோம் நமைகாத்தே நாட்டைக் காப்போம் !

பாவலர் கருமலைத்தமிழாழன்

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (19-Jul-15, 12:53 pm)
பார்வை : 427

மேலே