தவறில்லை தவறாத போதில் -கார்த்திகா

தேடி அலைகின்றனர்
பொன்னிறத் திரவத்தினுள்
மன அமைதி நாடி
மரணத்தைக் குடிக்கும்
நட்புறவுகள்
ஒரு சிரிப்பில்
உதிர்ந்துவிடும் வேதனைகள்
புன்னகையில் தோற்கும்
வெறுப்புகளும் கோபங்களும்
ஏன் புரிவதில்லை எவர்க்கும்
எல்லாம் மாறும்
நம்பிக்கையில் என்று
வெந்ததோ மீந்ததோ
பசி ஆற்ற
கண்ணீர் விடும் மனதின்
காயத்தை மாற்ற வேறு
மருந்துகளில்லை
வயது வந்த மகனின்
வரம்பற்ற குடியால்
சிறுகச் சிறுக
முதுமையில் மூழ்கும்
பெற்றோர் பலர்
பெருங் குடியால்
குடும்பத்தை வீதி
சிரிக்க வைப்பது ஏனோ
எந்தச் செயலையும் கட்டுப்படுத்த
நம்மால் முடியுமென்றால்
இதுவும்தானே!