என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் - கற்குவேல் பா

என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள்
`````````````````````````````````````````
என் விரல் பிடித்து
" அ - அம்மா " என்று
எழுதக் கற்றுக் கொடுத்த
முதல் வகுப்பு எடுத்த
மல்லிகா ஆசிரியர்

பத்து மாதம்
என்னைச் சுமந்த - என்
தாய்க்கு இணையானவர் ,
தாய்மொழியை எனக்குள்
விதைத்தவரென்பதால் !

* * *
புங்கை மரத்தடியில்
நல்லொழுக்க
பாடம் எடுத்த
இரண்டாம் வகுப்பு
ரோசி ஆசிரியர்

தவறுகளை
சுட்டிக் காட்டும்
தந்தைக்கு இணையானவர் ,
ஒழுக்க நீரூற்றி
எம்மை வளர்த்ததால் !

* * *
தலை சுற்றி
கீழே விழுந்த நொடியில்
மருத்துவமனை
அழைத்துச் சென்று

மறு உயிர்க்கொடுத்த
எட்டாம் வகுப்பெடுத்த
உடற்கல்வி ஆசிரியர்
அன்சாரி அவர்கள்
கடவுளுக்கு இணையானவர் !

* * *
பதினொன்றாம் வகுப்பில்
வேதியல் பாடத்தில்
தோற்றுப்போன அன்று
அருகில் அழைத்து
தோள் தட்டிக்கொடுத்து

அரையாண்டுத்தேர்வில்
மூன்றாம் மதிப்பெண்
எடுக்க வைத்த
வேதியல் ஆசிரியர்
தொட்டிச்சி அவர்கள் - என்
அக்காவிற்கு இணையானவர் !

* * *
இளநிலை பட்டப்படிப்பில்
அனுதினம் தாமதமாக
கல்லூரிக்கு செல்லும்
என்னை அரவணைத்து
அரைநாள் விடுப்புகொடுத்து

தன் மதியவுனவை
என்னோடு பகிர்ந்துகொண்டு
நேரத்திற்கு வரவைத்த
வித்தக தலைமை ஆசிரியர்
மாகாத்மன் ராவ் - என்
நம்பிக்கைக்கு உரித்தானவர் !

* * *
முதுநிலைப் பட்டப்படிப்பில்
முன்னின்று நடத்திய
மாணவர் போராட்டத்தினால்
கல்வியை இழக்க
இருந்த நேரங்களில்

தோள் கொடுத்துநின்று
நற்சான்று கொடுத்து
நிர்வாகத்திடம் வாதாடிய
என்துறை பேராசிரியர்கள்
என் மதிப்பிற்குரியவர்கள் !

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (5-Sep-15, 3:14 pm)
பார்வை : 3146

மேலே