கசையடிகள்

அக்பர் - பீர்பால் கதைகள்

கசையடிகள்

மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான்.

உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது. வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.

எழுதியவர் : முக நூல் (15-Oct-15, 7:33 pm)
பார்வை : 350

மேலே