அரும்புகள்
வாழ்வின் தேடல்கள்
எல்லாம்
வாழ்வில் கலந்திருக்கும்,
தேடலின் பசியிருக்க
வேள்வியில் வேட்கையிருக்கும்,
நாட்கள் ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
எண்ணம் கொள்..!
புதிதாய் தேடு
புதியவைக் காண்
புதிதாய் புணர்
புதிதாய் உணர்
புதிதாய் கொள்
புதிதாய் பயில்
உதிர்ந்துதான் போகிறது
நிமிடங்களும், நாட்களும்
பதிந்து தான் கிடக்கிறது
அதன் அணைத்து சுவடுகளும்,
சுவடுகளின் வடுக்களில்
சுகம் மட்டும் எடு, மகிழ்...
ஒருமுறை உணர்வுகொள்
ஒருமுறை கிளர்ந்தெழு
ஒருமுறை எல்லைத்தாண்டு
ஒருமுறை விழை
உலகத்தில் நீ
எல்லை கடந்திருப்பாய்
அப்போது உணர்வாய்
பிரபஞ்சம் உன்
காலின் கீழ்,
வேண்டுவதோ உன்
கையின் மேல்...!
எதார்த்தத்தின்
அர்த்தம் விளங்கும்,
அர்த்தப்படும்,
ஒவ்வொரு நிமிடங்களும்
எதார்த்தமாகும்...!
வாழ்க்கை உனதாகும்,
உன் வாழ்வை நீ
வாழ்ந்து பார்
அது உனக்கானது...
தடைகள் தாண்டு
உயரம் தொடுவாய்..!
சிகரம் தொட
பிறந்திருக்கிறாய்
உதிர்தல் கிளர்கிறது
புதிதாய் கிளர்ந்தெழு,
பிறந்திடு புதிதாய்
புணர்ந்திடு புதுவாழ்வு...!
உன் வர்ணம் தீட்ட
அதோ வானம்
தூரிகைக் கொண்டு வா
உன்னை வண்ணம் செய்
உலகு அடையாளம் கொடுக்கும்
அங்கிகாரம் கிடைக்கும்...!
வீழ்வதெல்லாம் விதைகளல்ல
விருட்சங்கள்,
நீ விருட்சம்..!
அரும்புகளெல்லாம்
மலர்ந்திடத்தானே,
நீ அரும்பாய் மலர்ந்திடு
நறுமணம் வீசியே..!
- கவிஞர். கவின்முருகு.