முரண்பாடு
தன் தாய் பெறுமை சொல்லி நாளும் திரிவார் - ஆனால்
பெண் சேய் பிறப்பின் கள்ளி பாலும் தருவார்.
நாட்டுக்கு மொழிக்கு தாயின் பெயரை வைப்பார் - ஆனால்
வீட்டுக்குள் பிள்ளைக்கு தந்தை பெயர் முன் நுழைப்பார்.
பொய் சொல்ல கூடதென போதனைகள் உரைப்பார் - ஆனால்
பூச்சாண்டி பொய் சொல்லி சோறை வாயில் திணிப்பார்
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்றெல்லாம் கதைப்பார் - ஆனால்
ஒருவரையும் நம்பாதே என தன் பிள்ளை காதை கடிப்பார்.
தீண்டாமை குற்றமென பள்ளிப்பாடம் எடுப்பார் - ஆனால்
தெருவில் கூடி விளையாட அனுமதிகள் மறுப்பார்
வாய்யில்லா ஜீவனை வதைப்பது பாவம் என்பார் - ஆனால்
வாராவாரம் கறியை வறுத்தும் பொறித்தும் ருசிப்பார்.
காதல் கதைகள் விரும்பி தினம் படிப்பார் - ஆனால்
காதலரை கண்டவுடன் கட்டிவைத்து அடிப்பார்.
ஆடி மாதம் கோவில்தோரும் அம்மன் புகழ் படிப்பார் - ஆனால்
ஆலயத்துள் பெண் நுழைய தீட்டு என தடுப்பார்.
ஆயிரம் காலத்து பயிரென்று திருமணத்தை அழைப்பார் - ஆனால்
ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை முடிப்பார்.
சுத்தம் சோறு போடும் என சுவரெங்கும் வரைவார் - ஆனால்
சத்தமின்றி அச்சுவர் மீதே சிறுநீரை கழிப்பார்.
வாழும் போது வயிற்றுக்கு வெறும் கஞ்சி தான் தருவார் - ஆனால்
வருடம்தோரும் தெவசதிற்க்கு வடைபாயாசம் படைப்பார்.