இரண்டாயிரத்து பதினாறே வருக

பருவ எழில் பொங்கும் பதினாறே வருக !
அருமருந்தாய் இருந்து ஆற்றலினைத் தருக !

வறுமையினை மாற்றி வளமையினை ஊற்றி
சிறுமையினைத் தூற்றி சீரொளியை ஏற்றி
பெருமையெல்லாம் கொள்ள பேரின்பம் அள்ள
விருந்தெனெவே ஊட்டி வயிற்றுப்பசி போக்க......

வன்முறைகள் அழிந்து வாழ்வு நலம் கொள்ள
துன்பநிலை தொலைந்து இன்பநிலை துள்ள
இன்முகத்தைக் காட்டி இதயமதைத் தீட்டி
அன்புநிலை வளர அகிலமெல்லாம் உயர.........

அறிவுநிலை வளர்ந்து அகிலத்தையும் வளைத்து
செறிவோடு வாழ்ந்து செழுமையினை விதைத்து
பரிவோடு யாவினையும் பார்த்திங்கு செய்து
நெறியோடு என்றும் நிலைபெற்று வாழ........

உறவோடு உள்ளங்கள் உணர்ந்திங்கு பழக
அறங்கொண்டு வருக அதர்மங்கள் விலக
நிறம்மாறும் மாந்தர்தம் நெஞ்சிலுரம் பெருக
வரங்கொண்டு வருக! வசந்தங்களைத் தருக.........

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (1-Jan-16, 6:06 pm)
பார்வை : 58

மேலே