காட்சிப்பிழைகள் -32- திருமூர்த்தி

உணர்வுகளின் நெருப்பு
தீம்புனலுக்குள் விழுந்தபோது
எனக்கான தருணமென
உடன்வந்து பருகினேன் ...

கனவுகளின் காகிதத்தில் காலங்கள்
மலர்கையில்....
எனக்கான நிமிடமென
உடன்வந்து நுகர்ந்தாய் ...

உயிர்தந்து உறைந்தாய் -எனது
குழல்கோதி விரைந்தாய் ...

உடலோடு புதைந்து
உனது சுவாசத்தில் நிறைந்தேன் ...

உனக்கும் எனக்குமிருந்த
இடைவெளிகளில் நெருக்கமான
நினைவுகளின் வெம்மைவழிகிற ஏக்கங்கள்
என்னை அம்மியில் அரைக்கின்றன ...

உனது சதைகளின்மீது
வதைபடும் விலைமதிப்பை
விட்டெறிந்து விழிதேடி வா ..!

கசியாத வாழ்க்கையை
கசக்கிப் பிழிந்துவாழ
ஆசைகளில்லையா ...?

காமநாய்களின் களியாட்டத்தில்
பகடையாக இருந்தது போதுமடி ...

கணவனை இழந்தவளே ...
கண்ணாளனாய் நான் வருகிறேன் ...
உன் கண்ணீரின் ஓரமாய்
நான் வாழ்கிறேன் ...

என்மீதான கேலிகளின் கேள்விகளுக்கு
இதயம்சிந்தி ஸ்பரிசம் தந்தவளே ..!
வா ..!
உன்மீதான காதலை
திடமான தனங்களின்
அலமாரிகளில் அடுக்கிவைத்திருக்கிறேன் ...

தாழிடாத எனது கதவுகளை பூட்டிவிடாதே ...!
எனது காத்திருப்புத் தாழ்வாரத்தில்
புழுதிபடிகிறது ...

அங்கங்களில்
அகப்பட்டுவிடாத அன்பானவளே ...
*ஓரினச்சேர்க்கை* ஒன்றும் பிழையல்ல ...!
உனது குங்குமமும்
எனது குறியும்
ஊருக்கு காட்சிப்பிழைகளாக இருப்பதிலும்
தவறில்லை ...!

எனக்கு நீ குழந்தையாக
உனக்கு நான் குழந்தையாக
கொஞ்சி விளையாடுவோம் வா ..!

ஒன்றே ஒன்றை மட்டும்
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் ..!

நீயும் அப்படிக் கேட்டுவிடாதே ...!

"நீ அந்தமாதிரி ஆளா?"என்று ...

*********************************************************************************************************************

ப(து)ணிவுடன்,
திருமூர்த்தி

**********************************************************************************************************************

கருத்துப்பிழை , எழுத்துப்பிழை அறிந்தால் தெரிவியுங்கள் ..!
கஜல்தானா என்று சோதனைசெய்து சொல்லுங்கள் ..!
நன்றி ..,

எழுதியவர் : திருமூர்த்தி (12-Jan-16, 2:14 am)
பார்வை : 425

மேலே