மழையில் ஓர் தேவதை

கார்மேகம் பெரிதாய் கூடி
பார்மீதெங்கும் மழை தூவி
கோப யுத்தம் நடத்தியது

சன்னலில் பூமகள் ஒருத்தி
இதழ்களில் புன்னகை பொருத்தி
தரையில் பட்டு
கோபம் விட்டு
உருவம் கெட்டு
முத்துக்களாய் சிதறும்
மழை மணிகளை
ரசித்தபடி லயித்திருந்தாள்

வாசலில் குடை பிடிக்கும் மரமல்லி
பூக்களை உதிர்த்து களிப்பதா
தண்ணீரில் குதித்து குளிப்பதா
என்ற யோசனையில் தள்ளாடியது

இந்த ஆட்டத்தில்
மல்லி சில தரை விழுந்தன
மரணித்தும் சிரித்தபடியே இருந்தன

இதை கண்ட பூக்களை நேசிப்பவள்
வேறொன்றும் யோசிக்காமல்
வீதியிறங்கி வாஞ்சையோடு
வாரிகொண்டால்
மலர்களை நெஞ்சோடு

முயல்பிள்ளையாய் மாறி துள்ளும்
தேவதையை கண்டுவிட்ட
மழை மேகத்தின் உள்ளம்
கோபம் மறந்து -மழை
கணையை துறந்து
அவள் எழிலில் திகைத்தது
உச்சியில் சூரியன் உதித்தது

மழையில் அவள் லயிப்பதும்
அவளை மழை வியப்பதும்
யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்த கவிதையை வாசிக்கும்
உங்களைத் தவிர ......

எழுதியவர் : டயானா (12-Jan-16, 11:33 am)
பார்வை : 90

மேலே