ஏழிலைக் கிழங்கும் துவையலும்
ஏழிலைக் கிழங்கும் துவையலும்
------------------------------------------------------
எங்கள் தோட்டம்
வருடந் தோறும் நெல் விளைந்த
முல்லை நிலத் தோட்டம்
தாது வருட பஞ்சத்திலும்
வற்றாமல் ஊறிய கிணறு
அதில் இருந்தது
அவரை மொச்சை துவரையுடன்
காணமும் எள்ளும் கடலையும் விளைந்த தோட்டம்
வான் நோக்கி நீண்ட தென்னைகள்
கலப்படம் இல்லாத வெயிலைக் குடித்து
இளநீர் தந்தன
முயல்கள் பாம்புகள் கீரிகள்
காட்டுக் கோழிகள் பறவைகள் வசித்த
சிறு வனம் போன்றது அந்த தோட்டம்
நெல் தாள் அறுத்த தரிசில்
மயில்கள் வந்து மணிகள் பொறுக்கும்
குலை தள்ளும் வேளையில்
வாழையில் இருந்து மருதாம்பு பயிருக்கு எடுக்கப்படும்
வீரிய கன்றுகள் போல
அத்தோட்டம் பங்காளிகளின் குடும்பங்களை வளர்த்தெடுத்தது
பங்காளிகளின் வீட்டு நிலையும் யன்னல்களும்
தோட்டத்து வேம்பினால் ஆனவை தான்
எங்கள் பூட்டன்களின் ஆயுள் ரேகை
தோட்டத்தில் விளைந்த பச்சைக் காய்கனிகளால் நீண்டது
அத்தோட்டத்தில் ஏர் பிடித்த கடைசி தலைமுறை விவசாயிகளின்
குழந்தைகள் பேனா பிடிக்கத் தொடங்கி விட்டன
நதியை வளைத்த நீர்த் தாவரங்கள் போல
பக்கத்தில் வளரும் நகரம்
அத்தோட்டத்தை தின்னத் தொடங்கியது
விளை நிலத்தில்
வீடுகளும் வணிக வளாகங்களும் முளைக்கத் தொடங்கின
கடைசியில்
பூட்டன்கள் வெட்டிய கிணற்றையும்
கமலைத் தடத்தையும் மூடி
நிலத் தரகரிடம் விற்று விட்டு
பங்காளிகள் பிரிந்த போது
மேகங்கள் மின்னலால் மாரடித்து அழுதன
அப்போது பொழிந்த மழை உப்புக் கரித்தது
எனது கவலையெல்லாம்
என் தோட்டத்தில் விளைந்த
ஏழிலைக் கிழங்கும் துவையலும்
இனி எப்போது கிடைக்கும் என்பதுதான் ?
-------
அன்பழகன் செந்தில்வேல்