பக்தி யோகமும் இறைவனும்
ஊனை உருக்கி ஊணை சிறுக்கி
ஆசா பாசங்கள் எல்லாம் அடக்கி
ஆண்டவனைக் காண அங்கு
பல்லாண்டு தவம் செய்து காத்திருந்தார்
முடிவில் சிலர் கண்டார்
பலர் உணர்ந்தார் .
தூய உள்ளத்தால் பக்தி ஒன்றே
மனதில் பதித்து மனம் உருகி
பாடிப் பாடி மகிழ்ந்த அடியார்க்கு
எதிரே வந்து அவர்கள் வேண்டும் ரூபத்தில்
காட்சி தருவான் இறைவன்
இதுவல்லவோ பக்தி யோகத்தின் மகிமை !
அப்படித்தான் அன்று பாடித்திருந்த நந்தனுக்கு
நந்தி விலக காட்சி தந்தான் ஈசன்
கீழ் ஜாதியன் என்று விலக்கப்பட்ட
திருப்பான் பக்தியால் இனிதே
யாழ் மீட்டி பாட பாடி அழைக்க
அரங்கன் அக்கணமே அவனுக்கு
காட்சி தந்தான் முக்தி அளித்தான்
நாம் இன்று கொண்டாடும் திருப்பான் ஆழ்வானுக்கு!
தஞ்சை திருவையாறில் வாழ்ந்து வந்தான்
தியாகராஜன் தன் இசையால்
பக்தி வெள்ளத்தில் மிதந்து
ராம ராம என்று இறைவனை
அழைத்தான் பூஜித்தான்
தன்னைத் தான் என்பதை மறந்து
இறைவனும் அவனுக்கு அந்த
அண்ணல் ராமனாய் தன்
மனைவி அன்னை சீதையுடன்
தம்பி இலக்குவன் மற்றும் அனுமன்
சூழ காட்சி தந்தான் மகான் தியாக ராஜனுக்கு
இவை எல்லாம் நடந்தவையே .
கட்டுக் கதையோ கற்பனையோ அல்ல
இது கலி காலம்
இறைவனைக் காண
மெய்யான பக்தியே போதும்
என்பர் ஞானிகள் .
ஆம் பக்தியாம் வலையில்
தானே வலிய வந்து சிக்குவான்
அந்த வாலறிவன்
பாலைக் கடைந்து அதில்
மறைந்திருக்கும் வெண்ணையை
எடுப்பது போல்
பக்தியால் உளமார பாடி அழைத்தால்
அந்த வெண்ணெய் போல் நம்
கண் எதிரில் வந்து
காட்சி தருவான் இறைவன்
இது வெறும் வாய்ச்சொல் அல்ல
நான் உணர்ந்த சத்திய வாக்கு .
i