மணந்தப் பூக்கள்

நல்ல நாள் தேதிப் பார்த்து
நட்பும் சொந்தமும் கூடி வந்து
மங்கை இவளை ஆசிர்வதிக்க - மாலையிட்டு
தாலிக்கட்ட மனைவி ஆனாளே......


முகூர்த்த நேரத்தில் முடிச்சுகளிடும் கைகளை
முன்நின்று பிடித்தாள் மகனின் தாயார்...
சொல்லிய தட்சணை கொடுக்கவில்லை யென்று
சொல்லி நிறுத்தி விட்டாள்......


வாழ்ந்து பெயர் வாங்கியக் குடும்பம்
வாழ்வினைத் தொடங்கும் முன்னே - வறியவன்
வடித்த வண்ணச் சிலையினை சிதைக்காதீர்
வாரத்தின் முடிவில் தட்சணைத் தருகிறோம்......


பெரியோரும் சேர்ந்து சமாதானம் பேசி
பெற்றோரும் அவர்களின் காலில் விழுந்து
பெரும் யுத்தக் களத்தில் போராடியே
நடந்தது சுப நிகழ்வு ......


நேரம் தவறாது கொடுத்தப் பணத்தால்
நன்றாக நாட்கள் சிலவும் நகர்ந்தது...
இன்பம் தந்தவர்களின் செயல்க ளின்று
துன்பம் தந்திட விரைந்தன......


கிளியாகச் சின்னக் கூட்டினில் பிறந்தவள்
உளியின் ஓசையும் செவிகள் கேட்காதவள்
ஊசிமுனைச் சொற்கள் உள்ளம் பாய்ந்திட
உடைந்தே நொருங்கு கின்றாளே......


வீட்டில் வேலைச் செய்யும் உனக்கு
கட்டிலில் என்ன உறக்கம் வேண்டியிருக்கு
கட்டாந்தரையில் துணி விரித்து - களிப்புடன்
உறங்கு என்றான் கணவனே......


இருட்டில் மட்டும் உறவு கொண்டு
கட்டியக் கணவன் கல்லாய் ஆனானே...
விட்டுவிலக இவளுக்கு மனமும் இல்லை
விடாது துரத்தும் பேய்களின் எல்லை......


தங்கம் தந்தது போதவில்லை யென்று
அங்கத்தின் தோலுரிய அடிக் கின்றானே...
வாங்கிய அனைத்து அடிகளின் தாக்கமும்
தூங்கியப் புலியின் கொடியத் தாகமே......


பலவகை உணவுகளை அவர்கள் சாப்பிட்டு
பழையச் சோற்றை இவளுக்கு கொடுத்து
பத்து வாரம் ஒருமுறை பணம்கேட்டு
பிறந்த வீட்டுக்கு அனுப்புகிறானே......


இருப்பதை எல்லாம் விற்றுக் கொடுத்தனர்...
இனியும் விற்க ஒன்றும் இல்லை...
இருப்பதோ?... இருவர் உயிர் ஒன்றுதான்
இதையும் வாங்கித்தான் ருசிக்கின்றனர்......


போதையை தினம் ஏற்றிக் கொண்டு
உதைத்து அணு அணுவாய் வதைக்கிறான்...
பேதையின் நெஞ்சு அனலாய் கொதிக்கிறது
சிதையின் நடுவில் சிக்கிக் கொண்டு......


வனத்தில் உள்ள முட்கள் எல்லாம்
மனதில் ஆறாத இரணங்களாய் தைத்திடவே
அனல் வாட்டவும் புனல் ஊற்றவும்
வானம் போல் வஞ்சியும் ஆனாளே......

எழுதியவர் : இதயம் விஜய் (2-Jul-16, 10:50 am)
பார்வை : 444

மேலே