வளையலோசை

வாழைமரம் வரவேற்க
வாசலிலே பெருங்கூட்டம்
வளைகாப்பு வைபோகம்...!

வெள்ளைச்சட்டையில் மாப்பிள்ளை
கிண்டலடிக்கும் இளவட்டம்.!

தத்தித்தாவும் சிறுவர்கள்
தாவணிப்பெண்கள் அணிவகுப்பு.!

"கலகல" சிரிப்போசை
சிணுங்கிடும் வளையலோசை
முகத்தில் மகிழ்ச்சி
அவள் இன்புற்றிருந்தாள்
அவளின் வெட்கத்திற்கு
மஞ்சள் நிறம் பூசப்பட்டுக்கொண்டிருந்தது....

எல்லோரும் முறைப்பார்த்து
முன் செல்ல
நான் மட்டும் காலை
பின்வைத்தேன்
என் பிறப்பை நொந்தபடி....

நெஞ்சில் வந்தேறியது
பொறாமையும் கோபமும்..
கண்ணில் நீர்
கரை கடந்தது...

கூட்டத்தில் ஒரு குழந்தை
ஆள்தெரியாமல்
"அம்மா "என்று எனையழைக்க
'மலடி' பட்டம் வாங்கிய
என் மனதில்
முதன்முதலாக சுரந்தது பால்..!!!


- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (6-Jul-16, 10:05 am)
பார்வை : 400

மேலே