வயல் வெளிகளில்

வயல் வெளிகளில் வாசம் கொண்ட‌
நண்டுகளும் எலிகளும்
பூமிக்கடியில் புதையுண்டு
மண்ணோடு மண்ணாயின..

வயல் வெளிகளில் சுற்றி வந்த
பறவைக் கூட்டங்கள்
பாதி உணவின்றி உயிர்விட்டன‌
பாதி நீரின்றி இடம் பெயர்ந்தன..

வயல் வெளிகளில் வசந்தம் கொண்ட‌
தென்றலது வெற்றிடத்தில் மறைந்து போனது
அடிக்கும் சிறுகாற்றும் குறைந்து போனது
அறைக்குள்ளே அடைபட்டு இன்று வாடிக்கிடக்குது

வயல் வெளிகளில் வீற்றிருந்த
வரப்பும் வாய்க்காலும்
போக்கிடம் தெரியாமல் சொர்க்கம் சென்றன‌
தன் வாழ்வு முடியக்கண்டு கண்ணீர் விட்டன..

வயல் வெளிகளில் உற்சாகமாய் ஆடிய‌
கேலிப்பேச்சுக்களும், நாட்டுப்புறப்பாடல்களும்
முறைப்பொண்ணு பையன்களின் காதல்மொழிகளும்
மனிதன் எனும் கொடிய நோயால் மாண்டுபோயின...

வயல் வெளிகளில் தலையாட்டிக் கொண்டிருந்த மரங்கள்
பரலோகம் அடைந்தன..
உலகில் உயிர்ப்பித்தற்காக உலகை சிறப்பித்ததற்காக‌
சீக்கிரமே மறைந்து உலகை மாசுக்களின் உலகாக மாற்றிப்போட்டன..

வயல் வெளிகளில் சுயநல மனிதன்
அதன் சத்தையெல்லாம் உறிஞ்சி சக்கையாக்கி
அதை வெட்டி வெட்டி கட்டம் போட்டு காசாக்கி
அதன் மேல் மாடமாளிகைகள் கட்டி விலங்காய் வாழ்ந்துவருகிறான்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Aug-16, 10:40 am)
Tanglish : vayal velikalil
பார்வை : 1040

மேலே