காவிரியே கனிவோடு களித்தாடிவா

தடைபோட்டுத் தடுத்தாலும் தமிழ்நாட்டின் வளம்காக்கத்
****தயங்காமல் தவழ்ந்தோடிவா !
இடையூறு கொடுத்தாலும் இமைப்போதும் அசராமல்
***இயல்பாக எதிர்த்தோடிவா !
விடைகூறி விரைவாக விவசாயம் செழித்தோங்க
****விருப்போடு சிரித்தோடிவா !
புடைசூழ வருவோரின் புரியாத பகைமாற்றிப்
****பொலிவோடு புரண்டோடிவா !

அடைத்தாலும் மறித்தாலும் அடங்காமல் திமிராக
****அணைப்போரை இனங்காணவா !
மடைதாவி விளையாடி மருண்டோடும் கயல்மீனை
****மறவாமல் உடன்கூட்டிவா !
நடைபோட்டு மிடுக்காக நதியேயுன் எழிலோடு
****நலம்வாழக் குதித்தோடிவா !
கடைத்தேற வழிபார்த்து கருவாயுன் கவிகேட்டுக்
****கனிவோடு களித்தாடிவா ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Sep-16, 12:28 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 96

மேலே