இழந்த காலங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
துள்ளிக் குதித்து வருத்தமறியாது
பள்ளிச் சென்ற பால்யப்பருவமது
வந்திடுமோ வாழ்வில் நமக்கும் ?
இளவட்டங்கள் அணியாக இணைந்து
இன்பமுடன் சுற்றித்திரிந்த நேரங்கள்
இனியும் திரும்பிடுமா அக்காலம் ?
பெற்றவரைப் பிள்ளைகள் துதித்ததும்
நேயமுள்ள நெஞ்சங்களை மதித்ததும்
காண்போமா இனிவரும் காலத்தில் ?
பண்பாடும் அறநெறிகளும் தவறாது
வழிமுறையாய் வாழ்வில் இருந்தது
வந்திடுமா மீண்டும் உள்ளத்தில் ?
சூதுவாதும் பழியுணர்வும் அறியாத
காழ்ப்புணர்வு அரசியலும் தெரியாத
சூழ்நிலை நிலவியதும் திரும்புமா ?
மும்மாரிப் பொழிந்திட்டு பூமியில்
முப்போகம் பயிரிட்டு மகிழ்ந்திட்ட
பொற்காலம் வந்திடுமா இனியும் ?
கலப்படம் இல்லாத பொருட்கள்
ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள்
இல்லாத நிலையும் காண்போமா ?
கூடி வாழ்ந்த கூட்டுக்குடும்பங்கள்
பசுமை நிறைந்த வயல்வெளிகள்
காணாத நிலையும் மாறிடுமோ ?
இழந்த காலங்களும்
இறந்தவர் நிலையும்
என்றும் ஒன்றேதான் ....!!!
பழனி குமார்