கேட்பதெல்லாம்

திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை.  எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப் படுத்த முடியும் எனச் சொல்லும் செய்கைகள். ஒரு தந்தையாய், சகோதரனாய், நண்பனாய் தான் பெற்றெடுக்கும் மகனாய் குறிப்பிட்ட எல்லைக்கப்பால் கூடவே பயணிக்கும் துணைவனாய் என வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா ஆண்களிடத்திலும் ஒரு பெண் எதிர்பார்ப்பது இதைத்தான். ஒரு ஆணுக்கு மிகவும் கஷ்டமான விஷயமே ஒரு பெண்ணை மதித்தல்தான். சக மனுஷியாய் பார்க்கும் ஆண்களும் இல்லாமலில்லை.  அப்படிப்பட்ட ஓர் ஆணை சந்திக்கும் எந்தப் பெண்ணுமே கவரப்படுவாள். அது காதலாகவோ, நட்பாகவோ, தாய்மையாகவோ அவளிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
 

எழுதியவர் : Shafiya (14-Nov-16, 9:53 pm)
Tanglish : ketpathellam
பார்வை : 52

மேலே