ஒரு நாள் கூத்து

மணமாகாத மணப்பெண் நான்...
பட்டுப்புடவைகள் பளபளக்க
பாத்திரங்கள் பத்திரமாய் காத்திருக்க...
நகைகளை நளினமாய் நான் எடுக்க..
பெண் பார்க்கும் படலமும்
படபடவென ஆரம்பமானது...
காட்சிப்பொருளாய் கணநேரம்
வந்து நிற்க...
மாப்பிள்ளையை மனதார
நான் ரசிக்க...
வரதட்சணையோ வரம்பு மீறிச் சென்றது...
என் வறுமையும் பொறுமையாக விவாதிக்கப்பட்டது...
உடன் வந்திருந்த சுற்றமும்
என் மீது குற்றம் கண்டுபிடிக்க...
திரும்ப வருகிறோம் என்று கூறிச்
சென்றவர் திரும்பாமலே சென்றனர்..
ஒப்பனை செய்து ஓய்ந்து விட்டேன்...
காட்சிப்பொருளாய் நின்று
களைத்து விட்டேன்...
என் மாங்கல்ய கனவும்
மங்கிப் போனது...
முதுமை தோற்றமும்
முகத்தில் தென்பட..
வெள்ளை முடியும்
வேதனை அளிக்க...
கண்ணாடியை கழற்றி விட்டேன்
காண சகிக்காமல்...
என்னில் இளையவரும்
இளமையிலே மணமுடிக்க...
திருமணத்தடையில் நானும்
திருதிருவென முழிக்க...
பரிகாரம் பலநூறு செய்தாயிற்று...
வெள்ளிதோறும் விளக்கேற்றியாயிற்று...
விரதமிருந்த என்னை
விரக்தி பற்றியது...
முதிர் கன்னியாய் நானும்
முதல் தாரத்தை இழந்துவிட்டேன்...
பெற்றோரை உதறி
பெட்டியோடு வெளியே செல்ல
மனம் வரவில்லை எனக்கு...
தற்கொலை எண்ணமும்
கணம் கணம் தோன்ற...
கண்ணாளனும் கண்ணில் படுவானா...
காத்திருக்கிறேன் கனவுகளுடன்...

எழுதியவர் : ரஜனி ஆர்த்தி க (28-Jan-17, 12:25 pm)
Tanglish : oru naal koothu
பார்வை : 151

மேலே