மழு

மழைமேக மாகவும் கழைராக மாகவும்
மண்மீது திரியுபவனே ! - ஒரு
மத்தளச் சத்தத்தின் சித்தத்தில் முத்தத்தில்
மனமொன்றி மகிழுபவனே !
இழையாத நூலிடை இடபாக மொன்றிட
இன்பங்க ளருளுபவனே - வரும்
இடரான யாவையும் துகளாகிப் போகவே
இச்சைகள் போக்குபவனே !
நுழையாத மனமெங்கு மிதமாக ஆடியே
நூதனம் ஆக்குபவனே - படர்
நுதலோடு விழிகொண்டு திருநீறு மேகொண்டு
நுண்நடன மாடுபவனே !
பிழையாடி டாமலென் பிஞ்சுப்பி தற்றலைப்
பின்னிருந் தாட்டுபவனே - ஒரு
பிறைசூடுந் தேவனே விடநாக மாலையை
பீடுற்ற ணிந்தசிவனே !

அரிதான உடலோடு புரியாமல் வருகின்ற
அழகுகள் வேண்டுமையா - சொலும்
அர்த்தங்க ளில்லாத சொற்கட்டு வேண்டிடேன்
ஆழக்க ருத்துவேண்டும் !
பெரிதான பொருளெதுவும் வேண்டிடேன் பெரிதெனப்
பெற்றவுன் அடிகள்வேண்டும் - பலப்
பெட்டகம் முத்தொடு வைரவை டூரியம்
பெறுவதில் இச்சைகொள்ளேன் !
சரியான நேரத்தில் சலசலவெ னக்கவிச்
ஜதிபோடும் நெஞ்சுவேண்டும் ! - ஒரு
சாட்டையடி மீட்டியுளக் கேட்டினையும் நீக்கிமனம்
சல்லாபம் தீர்க்கவேண்டும் !
விரிசடைக ளாடவே விண்ணோடும் மண்ணோடும்
விந்தைமிக ஆடுமீசா ! - உயிர்
வித்தாகும் தருணத்தில் உள்ளாடும் சீவனாய்
வீற்றிருக் கின்றநேசா !

காலமா தேவனின் ஜாலமே கண்டுளம்
கவலைப டைத்தல்வேண்டேன் - வெறும்
கட்டங்க ளிட்டதனில் கொட்டடித் தேவாழ்ந்து
கண்மூடும் வாழ்வுவேண்டேன் !
ஆலவிட மென்றாலும் அச்சங்க ளில்லாமல்
அருந்திடும் நெஞ்சுவேண்டும் - உன்
அன்பெனும் பார்வையில் வழிகின்ற சோதியின்
ஆற்றிலே நீந்தவேண்டும் !
வேலைகள் யாதெனத் தெரியாமல் புரியாமல்
வேதனைப் பட்டுநொந்து - வெறும்
வெட்டியாய்த் தீர்க்கின்ற போழ்துகள் வேண்டிடேன் !
வென்றிடும் பொழுதுவேண்டும் !
பாலனைக் காத்திடப் பாடலைக் கேட்டிடப்
பல்லக்கில் ஏறிநீயும் - உன்
படைசூழ பவளவாய் முழுவதும் நகைசூழ
பவனிதான் வருதல்வேண்டும் !

கதறுதல் கேட்டதோ கண்ணுனக் கில்லையோ
கதைசொன்ன மூன்றும்பொய்யோ - அட
கடவுளின் திமிரிலே கால்நகர வில்லையோ
கண்ணீரில் சுடரில்லையோ ?
விதவித நாடகம் ஆக்கினை யென்றெலாம்
வித்தகர் எழுதிவைத்தத் - திரு
விளையாடல் போலென்னைச் சோதித்துக் கதிசேர்க்கும்
விதியினைச் செய்யுவாயோ ?
நதியூறுஞ் சடையனே நங்கைவா ழுடலனே
நால்வரின் உற்றநண்பா - சிறு
நாவலன் பாவலன் பாபாடும் பாலகன்
நவில்வதைக் கேட்டிடாயோ ?
மதிசூடும் ஈசனே மரியாதை யாகவா !
மடிசாய்ந்து பாட்டிசைப்பேன் - வர
மறுத்துவிட் டாலுனை வெருட்டிடப் பாட்டெனும்
மழுகொண்டு போர்தொடுப்பேன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (26-Apr-17, 12:43 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 69

மேலே