நிலவே வருவாய் ஆத்ம நண்பனாய்
கோடி கோடி கவிஞர்கள் பாடினர்...
குமரிப் பெண்ணாய் கூடிக் குலவினர்...
வாடி வதங்கி வறண்ட பாலைப் பயணிகள்
வழித் துணையாய் உன்னை நாடினர்.....
பாலமுதூட்டி பச்சிளம் பசியாறிட
பாவையர் உன்னை வேடிக்கை காட்டினர்...
காதலில் வீழ்ந்த கட்டிளம் காளையர்
கவின்மலர் சூட்டி கன்னியரை களவாட
தூதுவனாய் உன்னை ஏகினர்
உன் நிலமடியில் காலூன்றிய நீல்ஆம்ஸ்ட்ராங்
விண்வெளிப்பயணத்தின் முதலடியானான்..
இதிகாசம் உன்னை ஆணாக சித்தரித்தது...
இலக்கியம் உன்னை பெண்ணாக வர்ணித்தது ...
ஆணோ பெண்ணோ அர்த்தநாரியோ...
ஆகாயம் குடிகொண்ட அந்திசுகந்தியோ..
ஆதிசிவன் சிகையமர்ந்த அயில் ஒளியே...
ஆயுள் முழுதும் அணைப்பாய் ஆத்மநண்பனாய்...!
கவிதாயினி அமுதா பொற்கொடி